மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்திய சோதனைகளில், 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
$555,000 சந்தை மதிப்புள்ள போதை மருந்துகளுடன் காற்றழுத்தத் துப்பாக்கியும் அதன் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இதை நேற்று தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளில் 3,730 கிராம் போதைமிகு அபின், 866 கிராம் 'ஐஸ்', 5,240 கிராம் கஞ்சா, இரண்டு கிராம் கெட்டமின், 51 எக்ஸ்டசி மாத்திரைகள், 108 எரிமின்-5 மாத்திரைகளும் அடங்கும். புக்கிட் பாத்தோக், காலாங், செங்காங் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் அஞ்சல் நிலையத்திலுள்ள குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் ஓர் பொட்டலத்தை ஊடுகருவியைக் கொண்டு வருடியபோது அது சரியாய் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
அதில் இருந்த இசைவட்டில் 26 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் அது ஒப்படைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கிம் மோ ரோடு அருகே அதிகாரிகள் 21 வயதுள்ள இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களைக் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவரிடமும் அவரது வீட்டிலும் சுமார் 191 கிராம் கஞ்சாவும் போதைப் பொருள் புழங்குவதற்கான சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. அவரது காரில் காற்றழுத்தத் துப்பாக்கியும் குண்டு களும் (கீழ்ப்படம்) கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் தரப்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை சாய் சீ அவென்யூ அருகே உள்ள வீட்டில் நடந்த சோதனையில், 58, 59 வயதுள்ள இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வீட்டில் போதைமிகு அபினும் மெத்தடோனும் கைப்பற்றப்பட்டன. கைதாகும் முன்னர் இருவரும் சன்னலுக்கு வெளியே போதை மருந்துகளை வீசினர் என்று நம்பப்படுகிறது. அதிகாரிகள் கைகளில் 13 கிராம் போதைமிகு அபினும் உறிஞ்சுகுழாய்களும் சிக்கின.

