கொவிட்-19 கிருமி உலகத்தைவிட்டு இன்னமும் ஒழியவில்லை. அதன் தாக்கம் குறைந்து இருக்கிறது என்றாலும் அந்தக் கிருமி விஸ்வரூபம் எடுத்து மீண்டும் தலைவிரித்து ஆடுமா அல்லது முதலும் முடிவுமாக உலகை விட்டு விடைபெறுமா என்பது ஐயமாகவே இருக்கிறது.
ஆனால் ஒன்று நிச்சயம். அந்தக் கிருமி அடியோடு ஒழியும் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் கொரோனாவோடுதான் இனி காலம்தள்ளவேண்டி இருக்கும் என்ற நிலைக்கு உலகம் வந்து இருக்கிறது.
இதுதான் உண்மை நிலவரம் என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதற்குத் தோதான ஒரு நிலையைப் படிப்படியாக எட்ட நாடுகள் முயன்று வருகின்றன. இதைப் பொறுத்தவரை மற்ற நாடுகளை விட சிறந்த நிலையில் சிங்கப்பூர் உள்ளது.
கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனுக்குடன் பொருத்தமான நடவடிக்கைகளை தீவிரமாக எடுப்பதும் அத்தகைய நட வடிக்கைகளுக்கான தேவைகளைப் புரிந்துகொண்டு, விதிகளை, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து கடமை உணர்வுடன், பொறுப்புடன் நடந்துகொண்டு அரசாங்கத்திற்குப் மக்கள் அளித்துவரும் ஒத்துழைப்பும்தான் இதற்குக் காரணம்.
இந்த ஒத்துழைப்பு காரணமாக கொவிட்-19 கிருமியை மட்டுமல்ல; அது போன்ற வேறு வகை கிருமி ஏதேனும் தொற்றினால் அதையும் தவிர்த்துக்கொள்ள வகை செய்யும் நோய்த்தடுப்பு ஆற்றலுடன் சிங்கப்பூர் சமூகம் இப்போது திகழ்கிறது. சிங்கப்பூரில் முதியோர், இளையோர் என மக்கள் அனைவரும் தடுப்பூசியை, பிறகு காப்பூசியைப் போட்டுக்கொண்டு கிருமியை எதிர்க்கும் ஆற்றலை தங்கள் உடலில் பலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
கொவிட்-19க்கு தொற்றுக்கு எதிரான போராட் டத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் வெற்றி மீது வெற்றி பெற்று வருகிறது. வெற்றி கிடைக்க கிடைக்க அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை, விதிகளை மேலும் மேலும் அகற்றி வருகிறது. இப்படி கட்டம் கட்டமாக முன்னேறி இப்போது கொரோனா கிருமியுடன் வாழ்வதற்குத் தோதாக சிங்கப்பூர் மேலும் ஒரு படி முன்னேறி இருக்கிறது.
ஆகையால் எஞ்சி இருந்த கட்டுப்பாடுகளில் பலவும் நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுகின்றன. இது பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி, இனிமேல் பெரும்பாலான உட்புற இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இராது.
என்றாலும்கூட சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், குடியிருப்புப் பராமரிப்பு விடுதிகள், மருத்துவ வாகனங்கள், மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றிலும் எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில்களிலும் பொதுப் பேருந்துகள், பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் பேருந்து ஏறும் இடங்கள், எம்ஆர்டி ரயில் நிலைய நடைமேடைகள் போன்ற உட்புற இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம், பள்ளிக்கூட பேருந்துகள், தனியார் பேருந்துகள், டாக்கிகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிவது உங்கள் விருப்பம். நீங்கள் விரும்பினால் முகக்கவசத்தை அணிந்துகொள்ளலாம். பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. கொவிட்-19க்கு முந்திய சூழல் வேகமாக திரும்பி வருகிறது. கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டிய கட்டாயம் குறைகிறது.
ஆனால், முன்பைவிட இப்போது பொதுமக்களுக்குப் பொறுப்பு கூடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். எச்சரிக்கையோடும் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டிய தேவை முன்பைவிட இப்போது முக்கியம் என்பதை அவர்கள் மனதில் பதியவைத்து செயல்பட வேண்டும்.
கூட்டமான இடங்களில் இருக்கும்போது அல்லது எளிதில் பாதிக்கக்கூடிய மக்களை எட்டும்போது முகக்கவசத்தை அணிந்து கொள்வது நல்லது.
வேலையிடங்களில் விதிமுறைகளைப் பின்பற்றத்தான் வேண்டும். அதேபோல, உணவகங்களுக்குச் செல்லும்போதும் இதர விருந்தோம்பல் நிலையங்களுக்குச் செல்லும்போதும் வெளியே சாப்பிடும் போதும் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத்தான் வேண்டும்.
சிங்கப்பூர் எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது. பெரும்பாலான கட்டுப்பாடுகளை அகற்றி இருக்கிறது. இதை நினைத்து, நாடு கொவிட்-19ன் கோரப்பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக யாராவது முடிவு செய்தால், அந்த முடிவு தவறாகத்தான் இருக்கும்.
கொரோனா கிருமி இன்னும் ஒழியவில்லை என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். எந்தச் சூழ்நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொது சுகாதாரம் முன்பைவிட அனுகூலமான சூழ்நிலையில் இப்போது இருக்கிறது.
இருந்தாலும் கொரோனா கிருமி உருமாறி புதிய வடிவில் அது தலைதூக்கினால், பொது சுகாதார வளங்கள் திடீரென நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு உருவாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். திடீர் மாற்றங்கள் நிகழலாம் என்பதால் அதற்கேற்ப மனரீதியாகவும் சிங்கப்பூரர்கள்
எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
கொரோனா கிருமி எப்போது, எந்த வடிவில், எப்படி மறுபடியும் தலைதூக்கும் என்பது தெரியவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது இலேசான பாதிப்புகளுடன் போய்விடுமா அல்லது இதுவரை இருந்ததைவிட இன்னும் பயங்கரமாக கோரத்தாண்டவம் ஆடுமா என்பதும் புரியவில்லை.
இந்த ஆண்டு முடிவில் வடதுருவ நாடுகளில் புதிய வகை கிருமி தலைதூக்கும் வாய்ப்பு இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அத்தகைய ஒரு சூழ்நிலையை எதிர்நோக்க தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு வருகின்றன என்பதை உணர்ந்து நாமும் தயாராக வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை கூடுமான வரை ஆற்றலுடன், திறமையுடன் சமாளித்து கிருமிப் பரவலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவை அரசு அப்படியே வைத்து இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் தமது பணியை செவ்வனே செய்து இருக்கிறது. அதேபோல மக்களும் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும். குறித்த நேரத்தில் காப்பூசியை (பூஸ்டர்) போட்டுக்கொள்ள வேண்டும். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் நாம் இதுவரை பெற்றிருக்கும் வெற்றியை மனதில் நிறுத்தி அந்த நம்பிக்கையுடன் எத்தகைய மிரட்டல் எப்படி வந்தாலும் அதைச் சமாளிக்க நாம் உறுதி பூணவேண்டும்.

