வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக்கு முதன்தடவையாக விண்ணப்பிப்போர் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வரும் வீடுகளில் தொடங்கி அவர்கள் இந்த வாய்ப்பைப் பெறலாம்.
அத்தகைய பேட்டைகயில் கட்டப்படும் நாலறை, அதற்கும் பெரிய வீடுகளில் குறைந்தபட்சம் 95% வீடுகள், முதல் முறை வீட்டுக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த அளவு இப்போது 85% ஆக இருக்கிறது.
தேசிய வளரச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று இந்த விவரங்களை அறிவித்தன. முதல் முறை விண்ணப்பிப்போருக்கு முதிர்ச்சிபெறாத பேட்டைகளில் ஒதுக்கப்படும் மூவறை வீடுகளின் அளவு வரம்பும் குறைந்த பட்சம் 85% ஆகும். இந்த வரம்பு இப்போது 70% ஆக இருக்கிறது.
முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் பிடிஓ வீடுகளை ஒதுக்குவதற்கான அளவு வரம்பில் மாற்றம் இராது. இத்தகைய பேட்டைகளில் விற்பனைக்குக் கொடுக்கப்படும் வீடுகளில் குறைந்தபட்சம் 95% வீடுகள் முதல் முறை விண்ணப்பிப்போருக்காக ஒதுக்கப்படுகின்றன. முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் முதியோருக்கு அல்லாத 'ஃபிளெக்சி' எனப்படும் ஈரறை நீக்குப்போக்கு வீடுகளில் 65% யிலானவை முதல் முறை மனுச் செய்யும் ஒற்றையருக்கு ஒதுக்கப்படும். இந்த விகிதம் இப்போது 50% ஆக இருக்கிறது.
பிடிஓ வீடு கேட்டு விண்ணப்பிப்போரில் முதல்முறை வீட்டுக்கு மனுச்செய்வோரே அதிகம்.
ஆகையால் இந்தப் பிரிவினர் முதன்முதலாக ஒரு வீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதிப்
படுத்துவதற்காகவே இந்த அளவு வரம்புகள் மாற்றி சரிசெய்யப்படுவதாக அமைச்சும் கழகமும் கூறின. ஆறு பேட்டைகளில் ஏறக்குறைய 4,900 ஏழு பிடிஓ திட்ட வீடுகளை கழகம் செவ்வாய்க்கிழமை விற்பனைக்குக் கொடுக்கிறது.
அந்த வீடுகள் சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், உட்லண்ட்ஸ் ஆகிய முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலும் கட்டப்படும். அங் மோ கியோ, புக்கிட் மேரா, தெம்பனிஸ் ஆகிய முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் எஞ்சிய வீடுகள் கட்டப்படும். பிடிஓ வீடு கேட்டு விண்ணப்பிப்போரில் முதல்முறை வீட்டுக்கு மனுச் செய்வோரே அதிகம். இவர்கள் எண்ணிக்கை 2018ல் 19,000க்கும் அதிகமாக இருந்தது. இது சென்ற ஆண்டு ஏறத்தாழ 34,000 ஆகியது. அதாவது 2021ல் ஒரு பிடிஓ வீட்டுக்கு கிட்டத்தட்ட 4.1 விண்ணப்பங்கள் வந்தன.
இந்த அளவு 2018ல் 2.2 ஆக இருந்தது. முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் கட்டப்படும் ஈரறை நீக்குப்போக்கு வீடு கேட்டு முதல் முறையாக வீட்டுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்களும் அதிகமாகி வருகிறார்கள். சென்ற ஆண்டில் ஒரு வீட்டுக்கு இத்தகைய 7.1 விண்ணப்பங்கள் வந்தன. இந்த அளவு 2020ல் 5.1 ஆக இருந்தது.
வீடு வாங்க முதல் முறையாக அல்லது இரண்டாவது முறையாக விண்ணப்பிப்போரின் அளவைப் பொறுத்து கழகம் ஏற்கெனவே பிடிஓ வீடு ஒதுக்கீட்டு வரம்பை திருத்தி இருக்கிறது.
அந்த அணுகுமுறையைப் போலவே இப்போதும் அது செயல்படுகிறது. முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் இரண்டாவது முறையாக வீடு கேட்டு விண்ணப்பிப்போருக்கான அளவு வரம்பு 2012 மார்ச்சில் உயர்த்தப்பட்டது.
2009 நவம்பரில் வீடுகளுக்கு அதிக தேவை நிலவியபோது முதல்முறை வீடு கேட்டு விண்ணப்பித்தோருக்கு கழகம் சில சரியாக்கங்களைச் செய்தது.
முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் கட்டப்படும் வீடுகளுக்கு விண்ணப்பித்து அழைக்கப்படும்போது முன்பதிவு செய்து அதன் மூலம் பிடிஓ வீட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி வீடு வாங்குவோருக்கு அமைச்சும் கழகமும் ஆலோசனை கூறி உள்ளன.

