சிங்கப்பூரில் இந்த ஆண்டில் நடக்க இருக்கும் ஃபார்முலா1 கிராண்ட் பிரீக்ஸ் அதிவேக கார்ப்பந்தயத்தை நேரில் காண அதிகம் பேர் வருவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டு முதல் அந்தப் பந்தயம் நடந்து வருகிறது. ஆனால் கொவிட்-19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அது நடக்கவில்லை. இந்த ஆண்டுதான் நடக்கிறது.
இந்த ஆண்டில் அந்தப் போட்டியைப் பார்க்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், அத்தகைய நிகழ்ச்சிகளில் மக்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அதிக தேவை இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது என்றார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் நடந்த தேசிய தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஃபார்முலா1 கிராண்ட் பிரீக்ஸ் சிங்கப்பூர் போட்டி மரினா பே பகுதியில் அக்டோபர் 2ஆம் தேதி நடக்கிறது. போட்டி நடக்கும் அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 25 இதர முக்கிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
அந்தப் போட்டி முதன்முதலாக 2008ல் நடந்தபோது அதை 300,000 பேர் பார்த்தனர். பிறகு 2019ல் அதைப் பார்த்தவர்கள் 268,000 பேர்.