இளையர் குரல்
பொன்மணி உதயகுமார்
அண்மையில் நடந்தேறிய பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை, குறிப்பாக இளையர்கள் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்தது. இவ்வாண்டின் பேரணி உரையை நான் உன்னிப்பாகக் கவனித்து அதைப் பற்றித் தீர ஆலோசிக்கக் காரணம், நான் ஒரு செய்தியாளர் என்பது மட்டும் காரணமல்ல.
என் நண்பர்கள் வட்டத்திலும் தேசிய தினப் பேரணி அதிகம் பேசப்படுவதற்கு, பிரதமர் உரையில் இடம்பெற்ற 377ஏ சட்டம் நீக்கப்படும் அறிவிப்பே காரணமாகும். சமுதாய மாற்றமும் இளம் சமூகத்தினரின் கண்ணோட்டம் மாறிவரும் சூழலும் அரசாங்கம் இந்த சட்ட ரீதியான மாற்றத்தைக் கொண்டுவரக் காரணங்களாகிவிட்டன. இதுகுறித்து மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டது.
தொலைநோக்குப் பார்வை
தேசிய தினப் பேரணியில் இடம்பெற்ற மேலும் பல அறிவிப்புகளும் நாட்டின் திட்டங்களும் இளையர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் மிக முக்கியமாக அமைந்தன. அடுத்த அரை நூற்றாண்டுக்கான திட்டங்களையும் பிரதமர் பகிர்ந்தது, சிங்கப்பூரின் தொலைநோக்குச் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.
கொவிட்-19 பெருந்தொற்றைப் பற்றி பிரதமர் பேசியபோது, ஒன்றிணைந்த தேசமாக நாம் இழப்புகளைக் கட்டுப்படுத்த திறமையாகச் செயல்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.
இதற்கு மாறாக, மற்ற நாடுகள் எத்தனை இழப்புகளை எதிர்நோக்கின என்பதும் புரியவந்தது. திறன்மிக்க தலைமைத்துவமும் சீரிய சிந்தனையும் நன்கு ஆராயப்பட்ட திட்டங்களுமே நமது மீட்சிக்கான அடித்தளமாகும். இனிவரும் காலத்தில் பெருந்தொற்றுகள் நம்மைத் தாக்கினாலும், அதை நாம் கடந்துவர முடியும் என்ற நம்பிக்கையை பிரதமரின் உரை அளித்தது.
வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூர் முன்னேறிச் செல்லும் இந்த நீண்ட நெடிய பயணத்தில், தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடத்தில் உள்ளது என்ற நம்பிக்கையும் வருங்கால சிங்கப்பூர் எப்படி தோற்றமளிக்கும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம்
ஆனால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகின் நிகழ்வுகள் கணிக்க முடியாத வகையில் சில ஆண்டுகளாக அமைந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, நம் நாட்டின் உணவு உற்பத்தியும் உணவுப் பாதுகாப்பும் அக்கறைக்குரிய அம்சங்களாக விளங்குகின்றன.
இதனால், பிரதமர் '30க்குள் 30' எனும் நம் உணவுத் திட்டம் குறித்து பேசியது என் கவனத்தை ஈர்த்தது.
அரசாங்கம் செய்து கொடுக்கும் வசதிகளை அனுபவிக்கும் நாம், ஏதோ ஒரு பற்றாக்குறை ஏற்படும்போதுதான் அதைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நமக்குப் பதிலாக நம் அரசாங்கம் சிந்தித்து, அப்படி ஒரு நிலை வருவதை முன்கூட்டியே தவிர்க்க நினைத்து முயற்சி எடுப்பது மனநிம்மதியைத் தருகிறது.
வெளிநாட்டு பதற்றநிலை குறித்து பிரதமர் பேசியபோது சிறு வயதில் நான் உலகச் செய்திகளுக்குச் செவி சாய்க்காமல் சுற்றித் திரிந்தது என் நினைவுக்கு வந்தது.
நான், என் குடும்பம், என் நண்பர்கள், என் வாழ்க்கை என்பதற்கும் மேலாக என் நாடு என்று சிந்திப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். காரணம், உலகச் சூழ்நிலைகள் எப்போது மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எந்தச் சவாலையும் எதிர்நோக்கும் தயார் நிலையில் நாம், ஒரு நாடாகச் செயல்பட வேண்டும் என்பதைப் பிரதமரின் உரை உணர வைத்தது.
வேற்றுமையில் ஒற்றுமையே பலம்
ஆனால், வெளியில் இருந்துதான் நமக்கு ஆபத்துகள் வரும் என்பதில்லை. சமூக ரீதியாக வெவ்வேறு கோணத்தில் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்பதையும் பிரதமர் கூறியது என் சிந்தனையை முடுக்கிவிட்டது. ஒற்றுமை நம் மக்களிடையே இருக்கிறது என்று சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டு வளர்ந்த எனக்கு, அந்த நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படக்கூடும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வேற்றுமைகள் ஒருவரைப் பாதிக்கும் வகையில் முன்வைக்கப்படுவதிலும் அது சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதிலும் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை.
சட்டம் பயின்ற எனக்கு, மனித உரிமைகளை மக்களிடமிருந்து அபகரித்துவிடக்கூடாது என்ற கடப்பாடும் தோன்றியுள்ளது. வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் எனக் கூறும் நாம், அதை இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் மட்டும் பார்ப்பதை மாற்ற வேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த மாற்றம் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு நன்மை பயப்பதற்காக அமையும் என்ற நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் நான் தொடர்ந்து நடைபோடுகிறேன்.

