ஒரு படகு மற்றொரு படகுடன் நேற்று மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, 82 பயணிகள் அவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் இது ஒரு பாவனைப் பயிற்சி.
சிங்கப்பூருக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே படகுச் சேவை மீண்டும் தொடங்கியுள்ள வேளையில், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் வருடாந்திர படகு மீட்புப் பயிற்சியான இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயிற்சியைப் பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். படகுச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது குறித்து பயணிகள், படகுச் சேவை வழங்கும் நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகிய தரப்பினரிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் கிடைத்துள்ள வேளையில், பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து திரு ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
"படகுச் சேவை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அவை பாதுகாப்பான முறையில் தொடர்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அதேவேளையில், பயணிகளின் தேவைகளையும் செயல்பாட்டுத் தேவைகளையும் நாம் பூர்த்திசெய்ய வேண்டும்," என்று அவர் விவரித்தார்.
இந்த வட்டாரத்தில் படகுச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய சூழலில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை எட்டியுள்ளதாக கடல்துறை, துறைமுக ஆணையம் கூறுகிறது. முழுச் செயல்பாட்டிற்குத் திரும்பியுள்ள ஹார்பர்ஃபிரண்ட் மற்றும் தானா மேரா படகு முனையங்களில் இருந்து டெசாரு, பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கு படகுச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக படகு மீட்புப் பயிற்சியின் அளவு குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 50 பேர் இதில் பங்கேற்றனர்.
'கடலில் அனைத்துலகப் பாதுகாப்பு' மாநாட்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பயிற்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சுகாதார அமைச்சு, காவல்துறை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, 'பாத்தாம் ஃபாஸ்ட் ஃபெரி' போன்ற தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்தப் பயிற்சியில் பங்கெடுத்தன.
செந்தோசா தீவின் மேற்கு கரையோரப் பகுதியிலும் ஹார்பர்ஃபிரண்ட் முனையத்திலும் நடைபெற்ற இப்பயிற்சி, இரு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை சித்திரித்தது.

