கொவிட்-19 கட்டுப்பாடுகள் கணிசமாக தளர்வு கண்டுள்ளதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க 'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை' அடுத்த மாதம் முழுவீச்சுடன் திரும்புகிறது.
28வது மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 10 வரை இடம்பெற இருக்கிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை நடைபெறும் எஃப்1 கார் பந்தயமும் இதே காலகட்டத்தில் இடம்பெறுகிறது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக வர்த்தகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடைத்தொகுதிகளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க சில்லறை விற்பனையாளர்கள் இவ்வாண்டு பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகளிலும் இணையத்திலும் அன்றாடச் சலுகைகளையும் மின் கூப்பன்களையும் வழங்க, சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர் சங்கம் அதன் 'கோஸ்பிரீ' செயலியைப் பயன்படுத்தும். சில்லறை விற்பனை, உணவு பானம், ஹோட்டல், கண்கவர் இடங்கள் ஆகிய துறைகளில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிறப்புத் தள்ளுபடிகளையும் எதிர்பார்க்கலாம்.
மேலும், 9.9, 10.10 'ஆச்சரியப் பெட்டி'களும் வழங்கப்படும். $99 பெறுமானமுள்ள பொருள்கள் செப்டம்பர் 9ஆம் தேதி $9.90க்கும் $100 பெறுமானமுள்ள பொருள்கள் அக்டோபர் 10ஆம் தேதி $10க்கும் விற்கப்படும்.
மாபெரும் சிங்கப்பூர் விற்பனையின் மற்றொரு சிறப்பம்சம், 'பேக் இட் அப்' எனப்படும் இருவழித் தொடர்பு அம்சங்களைக் கொண்ட விளையாட்டு.
அதில் $20,000 மதிப்பிலான பரிசுகளையும் பற்றுச்சீட்டுகளையும் வெல்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
'பசார் சிங்கப்பூரா' எனும் மெய்நிகர் இயக்கமும் இடம்பெறும். 'உள்ளூர்வாசிகளுக்காக, உள்ளூர்வாசிகளால்' எனப்படும் கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த இயக்கத்தின்கீழ் உள்ளூர் வர்த்தகங்கள் சிறப்புச் சலுகைகளை வழங்கும்.
'கோஸ்பிரீ' செயலியில் வாடிக்கையாளர்கள் அச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
2020ல் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை முதன்முறையாக இணையத்தில் இடம்பெற்றது. சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் அப்போது முடிவுக்கு வந்தது.
இணைய விற்பனையை அதிகரிக்க, கடந்த ஆண்டு சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர் சங்கம், லஸாடா நிறுவனத்துடன் கைகோத்து செயல்பட்டது.
இவ்வாண்டு எஃப் 1 கார் பந்தயத்தை முன்னிட்டு கூடுதலான சுற்றுப்பயணிகள் இங்கு வரவுள்ளதால், மாபெரும் சிங்கப்பூர் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

