இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆக அதிகமாக நிகழ்ந்த 10 மோசடி வகைகள் மூலம் மொத்தம் $227.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் $142.5 இழப்பு ஏற்பட்டது.
பொதுமக்களைப் பாதித்த
மோசடிகளில் வேலை தொடர்பான மோசடியே ஆக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாண்டில் இதுவரை 3,500 வேலை மோசடிகள் குறித்து புகார் செய்யப்
பட்டுள்ளன. அவற்றின் மூலம் $58 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டில் இதுவரை மொத்தம் 14,349 மோசடிகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 7,746 மோசடிகள் பதிவாகின. இது இவ்வாண்டைவிட கிட்டத்தட்ட இருமடங்கு குறைவு.
ஒட்டுமொத்த அடிப்படையில் குற்றச் செயல்கள் 36 விழுக்காடு அதிகரித்துள்ளன. மானபங்கம், இணையம் மூலம் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன.
"சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்
களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரில் நிகழும் மோசடிகளில் 90 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து புரியப்படுகின்றன. மோசடிக்காரர்கள் பொதுவாக குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லைத் தாண்டிய குற்றங்களில் ஈடுபடு
பவர்கள். இந்தக் கும்பல்களைக் கண்டுபிடிப்பதும் முறியடிப்பதும் சிரமம். மேலும் இந்த மோசடிக்
காரர்கள் பல வளங்களைக் கொண்டுள்ளனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை மறைத்து தப்பிக்கக்கூடியவர்கள்," என்று காவல்துறை கூறியது.
வேலை மோசடிகள், தனிப்பட்ட விவரங்களைத் திருடுவது, மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் ஆகியவை தொடர்ந்து அக்கறைக்குரியவையாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த ஆக அதிகமான 10 மோசடிகளில் இவை 74.5 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டது.
ஆக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மோசடிப் பட்டியலில் கடந்த ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்த வேலை மோசடி இவ்வாண்டு முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு உள்ளது. இதுதொடர்பாக 2,300க்கும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் $7.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 1,057 மின்வர்த்தக மோசடிகள் நிகழ்ந்ததாகவும் இவ்வாண்டின் முற்பகுதியில் அது 2,267ஆக அதிகரித்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடித் தடுப்பு மையம் 7,800க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கி ஏறத்தாழ $80 மில்லியனை மீட்டெடுத்ததாக காவல்துறை கூறியது.
இதற்கிடையே, மோசடிக் குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 24,500 தொலைபேசி எண்களை ஸ்கேம்ஷீல்டு செயலி தடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.1 மில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்திகள் குறித்தும் இச்செயலி மூலம் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கேம்ஷீல்டு செயலி 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியை தேசிய குற்றத் தடுப்பு மன்றமும் சிங்கப்பூர் காவல்துறையும் நிர்வகிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் கருவிகளைப் பயன்படுத்தும் 300,500 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆண்ட்ராய்ட் கருவிகளைப் பயன்படுத்துவோர் அடுத்த மாதத்திலிருந்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். மோசடிக் குறுஞ்செய்திகள், அழைப்புகளை இந்தச் செயலி அடையாளம் கண்டு தடுப்பதாக காவல்துறை கூறியது.
அத்துடன் மோசடிக்காரர்களின் உத்திகள் குறித்தும் செயலி தெரிவிக்கும். பல்வேறு மோசடிகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுப்பிக்கப்பட்ட புதிர்ப் போட்டியும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

