சிங்கப்பூரின் ஒரே ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பெற்ற நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்கும் சக தேசிய நீச்சல் வீரருமான அமெண்டா லிம்மும் கஞ்சா உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இருவரின்மீதும் சோதனை நடத்தியதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் இன்று(ஆகஸ்ட் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணையின் முடிவில் அமாண்டாவுக்குக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஸ்கூலிங்,27, தற்போது முழுநேர தேசிய சேவை புரிந்துகொண்டிருந்ததால் அவரது வழக்கு தற்காப்பு அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சி எடுக்கவும் கலந்துகொள்ளவும் 2022ம் ஆண்டு மே மாதம் தேசிய சேவையிலிருந்து ஸ்கூலிங் குறுகிய கால விடுப்பு எடுத்துக்கொண்டார். அப்போது வெளிநாட்டில் அவர் கனபிஸ் எனும் கஞ்சா உட்கொண்டதை ஒப்புக்கொண்டார்.