சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான செலவு அதிகரித்து வருகிறது. கூடுதலான சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது இதற்குக் காரணம்.
அதனால் தனியார் சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களுக்கான கட்டணமும் உயர்ந்து வருகிறது. இந்நிலை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் பணவீக்க விகிதம் அதிகரித்தது. ஆண்டு அடிப்படையில் சுகாதாரப் பராமரிப்புச் செலவு 1.7 விழுக்காடு கூடியதென சென்ற மாதத்திற்கான பயனீட்டாளர் விலை குறியீட்டு அறிக்கையில் தெரியவந்தது.
சென்ற ஆண்டு முழுவதற்குமான பணவீக்க விகிதம் 1.1 விழுக்காடு.
எனினும், இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் பதிவான ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் சுகாதாரப் பராமரிப்புக்கான விகிதம் குறைவு.
ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 5.5 விழுக்காடாகவும் சுகாதாரப் பராமரிப்புக்கான பணவீக்க விகிதம் 3.4 விழுக்காடாகவும் பதிவானது.
போக்குவரத்து, தங்கும் வசதி ஆகியவற்றுக்கான செலவுகள் ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும்போது கருத்தில்கொள்ளப்படமாட்டா.
சுகாதாரப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டங்களுக்கான செலவு 2.5 விழுக்காடு கூடியது. மருத்துவமனைச் சேவைகளுக்கான செலவும் இரண்டு விழுக்காடு அதிகரித்தது.
இத்தகைய காரணங்களால் சுகாதாரப் பராமரிப்புப் பணவீக்க விகிதம் உயர்ந்தது.
சென்ற மாதத்திற்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டு அறிக்கையின்படி வெளிநோயாளிச் சேவைகளுக்கான செலவு 1.8 விழுக்காடு கூடியது. சென்ற ஆண்டு முழுவதும் பதிவானதைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டுமே மருந்துகளுக்கான செலவு 0.6 விழுக்காடு அதிகரித்தது. நிலைமையைக் கையாள வாடிக்கையாளர்களுக்குக் கைகொடுக்க சுகாதாரப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டத்தைச் செயல்படுத்தாதோருக்குக் கட்டணக் கழிவு வழங்குவது போன்ற சலுகைகளை காப்புறுதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

