வரும் அக்டோபர் மாதம் முதல் மலேசியா மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்த முடிவை வரவேற்றாலும் கோழி இறைச்சி விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள், அதன் விலை அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் போன்ற அம்சங்களின் தொடர்பில் பயனீட்டாளர்கள், பண்ணை விலங்குகளின் இறைச்சியை விற்கும் கடைக்காரர்கள் ஆகியோரிடையே அச்சம் நிலவுகிறது.
மலேசியா மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்தாலும் விநியோகம் சீராக இருக்கும் எனச் சொல்லமுடியாது என்று கோழிச் சோறு விற்கும் சில கடைக்காரர்கள் அஞ்சுகின்றனர்.
சில கட்டுப்பாடுகளுடன்தான் மலேசியா மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யவுள்ளது. ஏற்றுமதி செய்ய அந்நாட்டின் சில பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது கட்டுப்பாடுகளில் ஒன்று.
உள்ளூரில் கோழி இறைச்சி வாங்குவோருக்குத் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று மலேசியாவின் பணவீக்கத்தைக் கையாள்வதற்கான செயற்குழுவின் தலைவர் அனுவார் மூசா கூறினார்.
தேவைக்கு சற்று அதிகமான அளவில் கோழி இறைச்சி இருந்தாலும் மலேசியா இதே நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கும் என்றார் அவர்.
இப்படிப்பட்ட சூழலில் மலேசியா எந்நேரமும் கோழி இறைச்சி ஏற்றுமதியை மீண்டும் நிறுத்தக்கூடும் என்று சில கோழிச் சோறு கடைக்காரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
ஒருவேளை எதிர்பாராவிதமாக மலேசியா ஏற்றுமதியை திடீரென நிறுத்தினால் தாங்கள் மீண்டும் நாட்டுக் கோழி இறைச்சியைப் பயன்படுத்த நேரிடும் என்பது அவர்களின் கவலை. நாட்டுக் கோழி இறைச்சியின் விலை அதிகம் என்பதால் அது தங்களின் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று கடைக்காரர்கள் அஞ்சுகின்றனர்.
எனினும், ஏற்றுமதித் தடை விலக்கப்படுவதை எண்ணி சில கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விரைவில் கோழி இறைச்சி ஏற்றுமதி மீண்டும் தொடங்கும் என்றும் விநியோகம் சீராக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டிருந்தபோது சில கடைகளில் 'சிக்கன் ரைஸ்' விலை ஒரு வெள்ளி கூடியது. மேலும், அதன் சுவை மாறுபட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்ததாக கடைக்காரர்கள் குறிப்பிட்டனர்.
அக்டோபர் மாதத்திலிருந்து மலேசியா மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யவுள்ளது

