வரும் 2030க்குள் உலகின் நான்காவது பெரிய பொருளியலாக ஆவதற்கான ஆசியான் முயற்சியில், வணிகங்களுக்கு இடையே எல்லை தாண்டிய சர்ச்சைகளை அதிகரிக்கலாம். இந்த சர்ச்சைகளைத் தீர்ப்பதில் சிங்கப்பூர், அதன் வலுவான சட்ட அமைப்பு, உள்கட்டமைப்புடன், முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக வர்த்தக சட்ட அகாடமியின் 'சிங்கப்பூர் மாநாட்டு வாரம்' எனும் மூன்று நாள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
கடந்த ஆண்டு ஆசியாவில் சாதனை அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்ததாகவும், இந்த முதலீடுகள் முதிர்ச்சியடையும்போது சர்ச்சைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச் சருமான டோங் கூறினார்.
"பல பெரிய வணிகங்கள் சிங்கப்பூருக்கு வந்து சர்ச்சைகளைத் தீர்க்க முயல்வதைப் பார்த்திருக்கிறோம். ஏனெனில் அவர்களது உறவு பல ஆண்டு கால உறவு.
"பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அந்த துறையில் சிறந்த அதே ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களையே நாடுகிறோம். அந்த உறவை முடிந்தவரை பாதுகாக்க முயற்சி செய்வது அவர்களுக்கு நல்லது," என்றார் அமைச்சர்.
நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளில் வணிக உறவைக் காப்பாற்ற, நடுநிலையான மூன்றாம் தரப்பு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் புதிய ஒப்பந்தத்தை நாடலாம். வழக்கு அல்லது நடுவர் மன்றம் என்று சென்றால் வணிக உறவுகள் சீர்கெடலாம் என்றார் அவர்.
மாநாட்டில் உரையாற்றிய சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலி இடையூறுகளால், ஒரு தகுந்த சர்ச்சைகளுக்கான தீர்வு கட்டமைப்புக்கு தேவை மேலும் அதிகரித்துள்ளது என்றார்.
இந்நிலையில், சமரசம் குறித்த சிங்கப்பூர் மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார் அவர்.
பலதரப்பு ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நடப்புக்கு வந்தது. இதில் மொத்தம் 55 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 10 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இது நாடுகளின் சமரச ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதை எளிதாக்குகிறது. இந்த ஒப்பந்தம் இல்லாமல், ஒரு நாட்டில் முடிவான தீர்வு ஒப்பந்தம் மற்றொரு நாட்டில் எந்த சட்ட அதிகாரத்தையும் பெற்றிருக் காது. அதைச் செயல்படுத்த கட்சிகள் நீதிமன்றம் செல்ல வேண்டும்.
ரஷ்ய-உக்ரேன் போரும் கொவிட்-19 தொற்றுநோயும் உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றார் திரு சண்முகம்.
"அமெரிக்கா, சீனா இடையே புவிசார் பதற்றம் நிலவும் வேளையில், வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்க, பல நாடுகள் மீள்திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இது உள்நோக்கி திரும்புவதாகவும் உள்ளது.
"இது மோசமான நிச்சயமற்ற சூழல். உலகமயமாக்கல் பின்னடைவைக் கண்டிருப்பதும் வெளிப்படை," என்றார் திரு சண்முகம்.
"ஒத்துழைப்பைக் கட்டிக்காக்கவும், உலக வணிகச் சூழலை இயன்றவரை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நாடுகள் மேலும் கடினமாக உழைத்து ஒன்றிணைய வேண்டும்," என அவர் கூறினார்.
சமரசம் பற்றி சிங்கப்பூர் மாநாட்டில் மேலும் பல நாடுகள் பங்கேற்க வேண்டும் என்று திரு சண்முகம் அழைப்பு விடுத்தார்.
"சமரசம் ஒப்பீட்டளவில் வேகமானது, மலிவானது, மிகவும் நீக்குப்போக்கானது, வணிக உறவுகளைப் பாதுகாக்க உதவுகிறது. இன்றைய சிதறிய நிலப்பரப்பில் இன்னும் முக்கியமானது," என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

