சிங்கப்பூர் கலைப் பல்கலைக்கழகம் (யுஏஎஸ்) எனப்படும் புதிய பல்கலைக்கழகம் 2024 ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறது. லசால் கலைக் கல்லூரி, நன்யாங் நுண்கலைக் கல்லூரி (நாஃபா) ஆகியஇரண்டின் கூட்டணியில் யுஏஎஸ் அமைகிறது. அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கும்.
கல்வி அமைச்சு, லசால், நாஃபா ஆகியவை இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
நுண்கலை, இசை போன்ற துறைகளில் யுஏஎஸ் பட்டங்களை வழங்கும். புகழ்பெற்ற பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கும் லசால், நாஃபா ஆகியவற்றின் தற்போதைய செயல்முறை முடிவுக்கு வரும்.
லசால், 2012ஆம் ஆண்டு முதல் லண்டனின் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்குகிறது. நாஃபா, 2011இல் பிரிட்டனின் ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக்குடனும் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டன் கலைப் பல்கலைக்கழகத்துடன் இதேபோன்ற ஏற்பாடுகளை தொடங்கியது.
இந்தத் திட்டங்களின் கீழ் சேரும் மாணவர்களின் கடைசிப் பிரிவினர் 2023இல் லசாலிலும் 2025 இல் நாஃபாவிலும் சேர்வார்கள். எனினும் இக்கல்லூரிகளின் மாணவர் பரிமாற்றத் திட்டங்களும் கூட்டு கல்வித் திட்டங்களும் தொடரும்.
அதன்பின்னர், இரு நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்கள் யுஏஎஸ்-நாஃபா அல்லது யுஏஎஸ்-லசால் என்ற பெயரில் யுஏஎஸ் பல்கலைக்கழகத்தின் பட்டங்களைப் பெறுவார்கள்.
கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்த இந்த புதிய பல்கலைக்கழகம், உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்கும். மேலும் அரசு மானியத்துடன் கூடிய பட்டயப் படிப்பு, பட்டப் படிப்புகளைத் தொடர்ந்து வழங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மிடில் ரோட்டில் உள்ள தேசிய வடிவமைப்பு மையத்தில் யுஏஎஸ் செயல்படும். பல்கலைக்கழகத்திற்கு புதிய வளாகம் இருக்காது.
லசால், நாஃபா ஆகிய இரண்டிற்கும் யுஏஎஸ் சில மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும். அவை தனித்தனி நிறுவனங்களாகவே தொடர்ந்து இருக்கும். மாணவர் சேர்ப்பு, பாடத்திட்டங்களில் அவை சுயேட்சையாகச் செயல்படும். எனினும் இரண்டிலும் சில பாடத்திட்டங்களைப் படிக்கும் வசதி இருக்கும்.
லசால், நாஃபா இரண்டும் புதிய பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில், தனித்தனியாக செயல்படும் இந்த முறை இக்கல்லூரிகளை மேம்படுத்துவதுடன் அவற்றின் தனித்தன்மையையும் பாரம்பரியங்களையும் பேண உதவும் என அமைச்சு கூறியது.
நாஃபா 1938இலும், லாசல் 1984இலும் நிறுவப்பட்டன.