தடை உத்தரவை மீறியதற்காக யூஜினுக்கு $4,000 அபராதம்
தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக மூத்த குற்றவியல் வழக்கறிஞரான 47 வயது யூஜின் துரைசிங்கத்திற்கு நேற்று $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனையின்போது, மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
2017 அக்டோபர் 9, அன்று மாலை மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ஒரு பெண்ணைத் துன்புறுத்தியதாக டாக்டர் இயோ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யூஜினும் திரு ஹாடியும் அச்சமயம் 52 வயது டாக்டர் இயோ சாவ் நாம்மைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வெளியிடுவதைத் தடுக்க தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் 5ஆம் தேதி நீதிபதியிடம் அந்த வழக்கின் ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் விநியோகிக்கக் கோரியிருந்தார் திரு யூஜின். தடை உத்தரவு மீறாத வகையில் ஆவணங்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்து விநியோகிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
கடந்த ஆண்டு மார்ச் 16 அன்று, யூஜின் மின்னஞ்சல் மூலம் ஹாடியிடம், "புகார்தாரரின் பெயரை மறைக்க நினைவில் கொள்ளுங்கள், புகார்தாரரின் பெயரை அச்சிட முடியாது என்பதை பத்திரிகைகளுக்கு நினைவூட்டுங்கள்," என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதற்கு வழிவகுக்கும் மற்ற தகவல்களையும் திருத்தும்படி ஹாடிக்கு அறிவுறுத்தவில்லை.
ஹாடி பெண்ணின் பெயரை மட்டும் மறைத்து ஆவணங்களை ஊடகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதனால் பாலியல் வழக்கில் வாதியாக இருந்த பெண்ணின் அடையாளம் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த விவரங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி நேற்று அரசு நீதிமன்றத்தில் கூறினார்.
டாக்டர் இயோ குற்றமற்றவர் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அவர் மீது குற்றம் சுமத்திய பெண் பொய் கூறினார் என்பது தெரியவந்தது.
துரைசிங்கம், ஹாடி இருவர் மீதும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. ஹாடியின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
தேசிய சேவை புரியாதவருக்குச் சிறை
தேசிய சேவை புரியாமல் நான்காண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூருக்கு வெளியே வாழ்ந்தவருக்கு ஒன்பது வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாய் யீ-சுவான் என்ற 25 வயது ஆடவர் அனுமதி பெறாமல் வெளிநாட்டில் வாழ்ந்தார்.
சிங்கப்பூரிய தாயாருக்கு பிறந்த, தைவான் நாட்டவரான அவர் ஒரு வயதில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார். 2015ஆம் ஆண்டு மருத்துவக் காரணங்களுக்காக தைவானில் முழு நேரத் தேசிய சேவை புரிவதற்கு அவருக்கு விலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் சிங்கப்பூரில் அவர் தேசிய சேவை செய்ய வேண்டும். அவர் நான்காண்டு, ஏழு மாதம், 18 நாள்கள் தேசிய சேவை செய்யும் கடமையிலிருந்து தவறினார். தேசிய சேவைக்கு அழைப்பு வந்தும், 2014, ஜூன் 5ஆம் தேதி தகுந்த அனுமதி பெறாமல் சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்.

