செயலிகளின் தரத்தை நிர்ணயிக்கும் வேலை எனக்கூறி குறைந்தது 43 பேரிடம் மோசடி செய்யப்பட்டு கிட்டத்தட்ட $781,000 பணம் பறிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த மோசடி வேலை நடைபெற்றுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அரையாண்டு குற்றப் புள்ளிவிவரங்களின்படி வேலை தொடர்பான மோசடியில் $58 மில்லியன் பணம் இழக்கப்பட்டது.
தற்போது மோசடிக்காரர்கள் பொதுமக்களை வாட்ஸ்அப் போன்ற இணைய தகவல் தொடர்பு செயலிகள் வழி தொடர்புகொள்வர். திறன்பேசி செயலிகளைத் தரவரிசைப்படுத்தும் வேலைக்குப் பணம் கொடுக்கப்படும் எனக் கூறுவர். அந்த வேலையை ஏற்றவுடன் ஓர் இணைய இணைப்பு மூலம் ஒரு கணக்கை உருவாக்கவேண்டும். அந்தக் கணக்கில் தெரியாத நபர்களிடமிருந்து பணம் போடப்படும்.
ஏமாற்றப்பட்டவர்களின் கணக்கில் கிரிப்டோகரன்சி எனும் மின்னிலக்க பணம் தெரிந்தவுடன் அவர்கள் செயலிகளைத் தரவரிசைப்படுத்தத் தொடங்குவர்.
ஒவ்வொரு செயலியையும் தரவரிசைப்படுத்த அந்த கிரிப்டோகரன்சி பணத்தைப் பயன்படுத்தவேண்டும். அந்த மின்னிலக்கப் பணம் முடிய முடிய இணைய கணக்கில் மீண்டும் பணம் நிரப்ப வேண்டும்.
முதலில் செய்த வேலைக்கு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தது. ஆனால் போகப்போக அந்த கணக்கில் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதுபோன்று ஏமாறாமல் இருக்க பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய வேலைகளை ஏற்கவேண்டாம் என்றும் தெரியாதவர்களிடம் பணமும் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்றும் காவல் துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை 14,349 மோசடி வழக்குகள் பதிவாகின. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான 7,746 வழக்குகளைவிட இரு மடங்கு அதிகம்
இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் மொத்தம் $346.5 மில்லியன் மோசடி இழப்புகள் ஏற்பட்டன.
இது கடந்த முழு ஆண்டும் இழக்கப்பட்ட $633.3 மில்லியனைவிட அதிகம்.
மோசடி குறித்த தகவல்கள் அளிக்க காவல் துறையின் 1800-255-000 எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.
மோசடிகள் குறித்த தகவல்கள் பெற 1800-722-6688 எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.

