சிலேத்தாரில் உள்ள வெஸ்ட் கேம்ப் ரோடு நெடுகிலும் ஒரு தடம் சைக்கிளோட்டிகளுக்காகவே ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் ஒதுக்கப்படும்.
அக்டோபர் 16ஆம் தேதி முதல் அத்தடத்தில் சைக்கிளோட்டிகள் செல்லலாம்.
அந்தத் தடம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சைக்கிளோட்டிகளுக்காகவே ஒதுக்கப்படும்.
இந்த ஏற்பாடு ஆறுமாத காலம் பரிசோதிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
அந்தத் தடம் அந்தச் சாலையின் இரு திசைகளிலும் செல்லும். நீலநிறத்தில் எடுப்பாக கோடுகள் வரையப்பட்டு இருக்கும். ஞாயிறுகளில் காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை அத்தடத்தைப் பேருந்துகள், சைக்கிளோட்டிகள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.
சைக்கிளோட்டிகள் 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினராக சைக்கிளோட்டிச் செல்லலாம்.
அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கார்களும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் அந்தத் தடத்தைப் பயன்படுத்த முடியாது.
போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது. போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், சிலேத்தாரில் சைக்கிளோட்டிகளுக்காக ஒரு தடம் ஒதுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று அப்போது கூறினார்.
அதிகம் பேர் சேர்ந்து சைக்கிளோட்டிச் செல்ல வேண்டுமென்று விருப்பம் தெரிவிக்கப்பட்டதால் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவர் என்றாரவர்.

