பொருள், சேவை வழங்கீட்டு கட்டமைப்பு பிரச்சினைக்கு உள்ளாகும்போது மக்கள் அமைதியாக இருக்கவேண்டும்.
அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
இப்படி இருந்தால் தனக்கு வேண்டிய பொருள்களை நாடு இறக்குமதி செய்யும்போது அதிக அனுகூலங்கள் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
நெருக்கடி நேரத்தின்போது நாம் பொறுமையாக, அமைதியாக இருந்தால் நமக்கு வேண்டிய பொருள்கள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் நமக்குக் கிடைக்க நல்ல வாய்ப்பு கிட்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். அப்பேட்டி நேற்று ஒலிபரப்பானது.
நெருக்கடி காலத்தில் நாம் பீதி அடைந்துவிட்டதாக மற்றவர்கள் நினைத்தால், அவர்கள் விலைகளை ஏற்றிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.
"அண்மையில் பொருள், சேவை வழங்கீட்டுக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டபோது, சிங்கப்பூரர்கள் அமைதியாக, நிலவரத்தை உணர்ந்து நடந்துகொண்டார்கள்.
"இதனால் நமக்கு நல்ல அனுகூலம் ஏற்பட்டது. இது நமக்கு பெருமை தருவதாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
கிடைப்பதை வைத்து அதற்கேற்ப நாம் நீக்குப்போக்காக நடந்து கொள்வதும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
"நாம் விரும்பும் உணவுப்பொருள் கிடைக்கவில்லை என்றால், வேறு பொருளுக்கு மாறிக்கொள்வது நல்லது," என்றாரவர்.
பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க சிங்கப்பூர் மூன்று உத்திகளை அமல்படுத்துகிறது.
இறக்குமதிகளைப் பலமுனைப்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தி ஆற்றலைப் பெருக்குவது, பொருள்களை அதிகம் இருப்பு வைப்பது ஆகிய அந்த மூன்று உத்திகளை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

