சீனாவின் உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு உத்தித் திட்டம் ஆசியாவின் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனாலும் வட்டார அமைதி சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார்.
ஆகையால் கடந்த பல ஆண்டுக் காலமாக இந்த வட்டாரம் செழிப்படைய உதவி வந்துள்ள நிலைப்பாட்டைக் கட்டிக்காப்பது முக்கியமானது என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
சீனாவின் அந்த உத்தித்திட்டத்தின் 7வது உச்சநிலைக் கூட்டம் புதன்கிழமை ஹாங்காங்கில் நடந்தது. அதில் திரு ஹெங் உரையாற்றினார். இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளும் மேலும் ஒருங்கிணைந்த வட்டாரமும் கைகூடி வரவேண்டுமானால் அது நிலைப்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பல பத்தாண்டு காலமாக இந்த வட்டாரம் நிலைப்பாட்டை அனுபவித்து வந்துள்ளது, அதில் ஆசியான் ஆக்ககரமான பங்காற்றி வந்துள்ளது. ஆனால் இப்போது பதற்றம் அதிகரித்துவிட்டது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தைவான் நீரிணை, தென் சீனக் கடல், கொரிய தீபகற்பம் ஆகியவை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சூழ்நிலை பதற்றமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசியாவில் அமைதி சீர்குலைந்துவிடக்கூடிய ஆபத்து இப்போது முன்பைவிட அதிகமாக இருக்கிறது என்று கூறிய பொருளியல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங், யாருமே போரை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இருந்தாலும் நம்பிக்கை இல்லாத ஒரு நிலையில், உத்திபூர்வ போட்டி தீவிரமடைந்து தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் அமைதி நொறுங்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று கூறிய திரு ஹெங், அத்தகைய ஒரு எதிர்காலத்தில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எல்லா தரப்புகளுமே ஒரு படி பின்னே சென்று பதற்றத்தை தணித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அதாவது, இந்த வட்டாரத்தை திறந்த நிலையில் வைத்திருந்து, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சூழலை நிலைப்படுத்தி, பேச்சுவார்த்தைக்கான ஆக்ககரமான வழிகளை எப்போதுமே திறந்துவைத்து, ஒத்துழைப்புக்கான பொதுவான அடித்தளங்களை அடையாளம் காண வேண்டும் என்பதே இதன் பொருள் என்று திரு ஹெங் கூறினார்.
'புதிய அத்தியாயம்: ஒத்துழைப்பும் புத்தாக்கமும்' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டில் உச்சநிலை மாநாடு நடந்தது.

