'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வதற்கு ஆக முக்கியத் தடையாக விளங்குவது அதன் தொடர்பில் முறையான விதிகள் இல்லாமையே என்று சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
உலகளவில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கருதுவோரின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர் சிங்கப்பூரர்கள்.
கருத்தாய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த, தனிப்பட்ட முறையில் இயங்கும் 1,004 முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 37 விழுக்காட்டினர் முறையான விதிகள் இல்லாததால் முதலீடு செய்யத் தயங்குவதைச் சுட்டினர்.
லக்சம்பெர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'பிட்ஸ்டேம்ப்' அமைப்பு, 16 வயதுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இந்தக் கருத்தாய்வை நடத்தியது. ஹாங்காங், ஸ்பெயின் ஆகியவற்றைச் சேர்ந்த இத்தகைய 34 விழுக்காட்டினர் விதிமுறைகள் இல்லாததைக் காரணமாகக் கூறினர். அவர்களையடுத்து, இத்தாலியைச் சேர்ந்த 32 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கூறினர்.
நிறுவன முதலீட்டாளர்களிலும் சிங்கப்பூரைச் சேர்ந்த் ஆக அதிகமானோர் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர்.
சிங்கப்பூரின் 32 விழுக்காட்டு நிறுவன முதலீட்டாளர்கள், மின்னிலக்க நாணயம் தொடர்பில் போதிய விதிமுறைகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டனர்.
ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற 23 பகுதிகளைச் சேர்ந்தோரிடமும் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என இரு தரப்பிலும் மொத்தம் 28,000க்கும் அதிகமானோர் பங்குபெற்றனர்.
சிங்கப்பூரிலிருந்து 252 நிறுவன முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் 53 விழுக்காட்டினர் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வதில் உள்ள மிக அதிகமான அபாயத்தைச் சுட்டினர்.
ஏறக்குறைய 56 விழுக்காட்டினர் மின்னிலக்க நாணயம் நம்பகமானது என்றே தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
கருத்துரைத்த தனிப்பட்ட முதலீட்டாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மின்னிலக்க நாணய முதலீடு பற்றி அறிந்துவைத்திருப்பதாகவும் அன்றாடம் அல்லது வாராவாரம் இதில் முதலீடு செய்வதாகவும் கூறியுள்ளனர்.
கருத்தாய்வு இந்த ஆண்டு மே மாத மத்தியில் இருந்து ஜூன் மாதத் தொடக்கம் வரை நடத்தப்பட்டது.

