உள்ளூர்த் தொழில்நுட்ப நிறுவனமான 'ரிபப்ளிக் பவர்', நோயாளிகள் சுயமாக சில முக்கிய மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள உதவும் வகையில் 'ஆர்பி மெட்போட்' எனும் கருவியை வடிவமைத்துள்ளது.
இதன்மூலம் ஒருவர் தனது உடல்வெப்ப நிலையைக் கணக்கிடலாம். இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஓர் இயந்திரம் அவரது ரத்த அழுத்தத்தை அளக்கும் வேளையில், உணர்கருவிகள் அவரது உயரம், எடை போன்றவற்றைக் கணக்கிட்டுவிடும். ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். இத்தனையும் மருத்துவத் துறை ஊழியர்களின் உதவியின்றி, சில நிமிட நேரத்திற்குள் கணக்கிடப்பட்டு விடும் என்பதுதான் இதன் சிறப்பு. மருந்தகங்களில் இத்தகைய இயந்திரங்கள் இருந்தால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரம் மிகவும் குறையும் என்பதை நிறுவனம் சுட்டியது.
வருங்காலத்தில் இதயத் துடிப்பைக் கணக்கிட உதவும் மின்னிலக்க 'ஸ்டெதொஸ்கோப்' கருவியையும் இதில் இணைக்கத் திட்டமிடப்படுவதாக ரிபப்ளிக் பவர் நிறுவனம் கூறியது.
ஜூரோங், தெம்பனிஸ் போன்ற இடங்களில் பத்து 'ஆர்பி மெட்போட்' கருவிகளை அமைப்பது இதன் இலக்கு.
மலேசியா, இந்தோனீசியா ஆகியவற்றிலும் இந்தக் கருவிகளை அறிமுகப்படுத்தத் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

