பள்ளி விடுமுறை நாளை தொடங்கவிருக்கிறது. இவ்வேளையில் மலேசியாவிற்குச் செல்லும் தரைவழிச் சாலைகளில் வாகனமோட்டிகள் தாமதத்தையும் கூட்ட நெரிசலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் தற்போது போக்குவரத்து கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த நிலையைப் படிப்படியாக எட்டியிருப்பதை ஆணையம் சுட்டியது.
செப்டம்பர் பள்ளி விடுமுறையின்போது மலேசியாவிற்கு தரைவழிப் பயணம் மேற்கொள்வோர் அதிகமான கூட்ட நெரிசலை எதிர்பார்த்து அதற்கேற்ப பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளும்படி நேற்று வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.
இதன் தொடர்பில் பயணிகளின் புரிதலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பொறுமையுடன் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி அது கேட்டுக்கொண்டது.
சென்ற மாதம் 26, 27, 28 ஆகிய வாரயிறுதி நாள்களில் இரு சோதனைச் சாவடிகளின் வழியாகவும் 313,000 பேர் பயணம் செய்ததாக ஆணையம் குறிப்பிட்டது.

