ரிவர் வாண்டர்ஸ் சுற்றுலாத் தளத்துக்குச் செல்வோர் அங்குள்ள ஜியா ஜியா, காய் காய் எனும் இரண்டு ராட்சத பாண்டா கரடிகளை 2027ஆம் ஆண்டு வரை பார்க்கலாம்.
ரிவர் வாண்டர்ஸ் சுற்றுலாத் தளத்தை நிர்வகிக்கும் மண்டாய் வனவிலக்குக் குழுமம், அந்தக் கரடிகள் இன்னும் ஐந்து ஆண்டுகள் இங்கிருப்பதற்கான ஒப்பந்தத்தில் சீன அமைப்புகளுடன் கையெழுத்திட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்ட காய் காய்க்கு இந்த மாதம் 15 வயதாகிறது. ஜியா ஜியாவுக்கு 14 வயதாகிறது.
இந்த இரு கரடிகளும் பல முறை முயன்று ஒருவழியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி லெ லெ எனும் குட்டியை ஈன்றெடுத்தன.
வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங், சிங்கப்பூருக்கான சீனத் தூதர் சுன் ஹய்யான், சீனாவின் தேசிய வனத்துறையின் உதவி நிர்வாகி லி சுன்லியாங் ஆகியோருடன் இதர அதிகாரிகளும் நேற்று ரிவர் வாண்டர்ஸ் சுற்றுலாத் தளத்துக்கு வருகை புரிந்தனர்.
அவர்கள் பாண்டா கரடிகள் சிங்கப்பூரில் இருப்பதற்கான கால அவகாச நீடிப்புக்கான ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.
"சிங்கப்பூர்-சீன உறவு ஆண்டுக்கு ஆண்டு வலுப்பெற்று வருகிறது. அத்துடன் நாங்கள் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்.
"இந்த நீட்டிப்பு ஒப்பந்தத்தின் மூலம் மண்டாய் வனவிலங்குக் குழுமமும் சீன வனவிலங்கு பாதுகாப்புச் சங்கமும் ராட்சத பாண்டா கரடி பாதுகாப்பு தொடர்பில் தங்களுக்கு இடையிலான பயனுள்ள பணியை மேலும் மேம்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. மேலும் இது சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது," என்று தமது உரையில் துணை அமைச்சர் லோ தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக் பார்க்லே, "சீன அமைப்புடன் எங்கள் பங்காளித்துவத்தை நீடித்துக்கொண்டது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்," என்றார்.
பாண்டா கரடிகள் நேற்று முன்கூட்டியே தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடின.
ஜியா ஜியாவின் பிறந்தநாள் இன்று (செப்.3). காய் காய்யின் பிறந்தநாள் இம்மாதம் 14ஆம் தேதி. அவை ஒவ்வொன்றுக்கும் நேற்று தலா ஒரு பிறந்தநாள் கேக் கொடுக்கப்பட்டது.
புதிய ஒப்பந்தத்தின்படி லெ லெ கரடிக் குட்டிக்கு இரண்டு வயதாகும்போது அது சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.