அதிபர் ஹலிமா: விருப்பத்தாலும் மனவுறுதியாலுமே ஒன்றிணைந்த சமுதாயம் மலர்கிறது
ஒன்றிணைந்த சமுதாயங்கள் தானாக உருவாவதில்லை; விருப்பத்தாலும் மனவுறுதியாலும் மட்டுமே அத்தகைய சமுதாயம் மலர்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் இதை மறுவுறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
சமயம், அடையாளம், ஒன்றிணைந்த சமுதாயம் ஆகியவற்றின் தொடர்பில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசியபோது திருவாட்டி ஹலிமா இவ்வாறு சொன்னார். கிருமிப் பரவலை முறியடிக்க செயல்படுத்தப்பட்ட பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகள் சமூக அளவில் 'என்சையட்டி' எனப்படும் மனக்கவலையை அதிகரித்ததாக அவர் சுட்டினார்.
அதைத் தொடர்ந்து பதற்றம் மோசமடைந்ததோடு சில வேளைகளில் இன ரீதியான தவறான கருத்துகள் தலைதூக்கியதைத் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
கிருமி பரவியதற்கு ஆசியர்களே காரணம் என்ற கருத்து நிலவியதால் சில இடங்களில் அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் இடம்பெற்றன. மேலும், தடுப்பூசித் திட்டங்கள் போன்றவை விவாதிக்கப்பட்டன.
"கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து விரைவில் மீண்டுவர ஒன்றுபட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஒத்துழைப்பும் தேவைப்பட்ட வேளையில் உலகளவில் சமுதாயங்களில் இருக்கக்கூடிய பிரிவுகள் மோசமடைந்தன," என்று அவர் சொன்னார்.
"நமது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு ஒன்றிணைந்த சமுதாயம் தேவையானது. மக்களை ஒன்றுசேர்க்கும் சமூகப் பிணைப்பு இல்லாவிட்டால் சமுதாயங்கள் தழைப்பது மட்டுமின்றி பிழைக்கவே முடியாமல் போய்விடும்," என்று அவர் எச்சரித்தார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஒன்றிணைந்த சமுதாயங்களுக்கான அனைத்துலக மாநாட்டில் 40க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 பங்கேற்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கலாசார, சமுக, இளையர்துறை அமைச்சின் ஆதரவுடன் எஸ் ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மாநாடு 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெறுகிறது. பங்கேற்பாளர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.