நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவற்றின் ஆய்வாளர்கள், குறிப்பாக மூத்தோர் விழுவதைத் தடுக்கும் இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர்.
இந்த இயந்திரத்தை அவர்கள் அணியவேண்டும். முதியோர், பராமரிப்பாளர்களைச் சார்ந்திருப்பதை இந்த இயந்திர மனிதன் குறைக்கும் என்றும் இது அவர்கள் தன்னிச்சையாக வாழ்வதற்கு உதவும் என்றும் கூறப்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம், டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய இயந்திரவியல் திட்டம் ஆகிய மூன்றும் கூட்டாக நேற்று இதைத் தெரிவித்தன.
ஒருவரின் அசைவுகளைக் கண்காணித்து அவர் சமநிலை இழப்பதை உடனடியாக கண்டறியும் உணர்கருவிகள் இயந்திர மனிதனுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. பட்டை வாரை அணிவதால் இயந்திரம் அவர் தடுமாற்றத்தை நிறுத்தி சமநிலைப் படுத்தும்.
நடக்க சிரமப்படுவோரும் தடுமாற்றம் உள்ளோரும் அமர்ந்துள்ள நிலையிலிருந்து பாதுகாப்பாக எழுந்து நிற்க இந்த இயந்திர மனிதன் உதவும். இதே போல நிற்பவர்கள் உட்காரவும் முடியும்.
நடமாடும் இயந்திர சமநிலைத் துணைக் கருவி என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இயந்திரத்தின் உயரம் ஒரு மீட்டர்; அதன் அகலம் 70 செண்டிமீட்டர். இதன் எடை சுமார் 100 கிலோகிராம் ஆகும்.
இயந்திரத்தின் பட்டைவாரை இடுப்பில் அணிந்துகொள்ள வேண்டும். அணிபவர் செல்லும் இடத்துக்கு இயந்திரமும் செல்லும். தேசிய இயந்திரவியல் திட்டத்தின் கீழ் இயந்திரம் உருவாக்கப்பட்டது.

