சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்து காரணமாக மாண்டோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும் அதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கி மரணமடைந்த முதியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்
துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த 44 சாலை விபத்துகளில் 45 பேர் மாண்டனர்.
இந்தத் தகவலை காவல்துறை நேற்று வெளியிட்டது.
2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த 52 சாலை விபத்துகளில் பதிவான 58 மரணங்களைவிட இது குறைவு.
இருப்பினும், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் காயங்கள் ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடியது.
2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காயங்களை ஏற்படுத்திய 2,960 விபத்துகள் நிகழ்ந்தன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் அத்தகைய விபத்து
களின் எண்ணிக்கை 3,115ஆக அதிகரித்தது.
காயங்கள், மரணங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திய சாலை விபத்து களின் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அத்தகைய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,012ஆக இருந்தது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த எண்ணிக்கை 3,159ஆக ஏற்றம் கண்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில்
போக்குவரத்து அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் தளர்த்தியது.
அதன்படி வேலையிடத்துக்குத் திரும்ப ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, ஒரே நேரத்தில் ஒன்றுகூட விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வரம்பு நீக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம்.
இதற்கிடையே, சாலை விபத்துகள் காரணமாக மரணம் அடைந்த முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐந்து முதியவர்கள் சாலை விபத்துகளில் மாண்டனர்.
இவ்வாண்டின் முற்பகுதியில் ஒன்பது முதியவர்கள் சாலை
விபத்துகளில் மாண்டனர்.
அதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் காயமுற்ற முதிய பாதசாரிகளின் எண்ணிக்கையும் 100லிருந்து 109ஆக அதிகரித்தது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்து காரணமாக மாண்ட பாதசாரிகளில் 81.8 விழுக்காட்டினர் முதியோர் எனக் காவல்துறை தெரிவித்தது.முதியோருடன் தொடர்புடைய சாலை விபத்துகளில் 45.3 விழுக்காடு விபத்துகள், விதிகளுக்குப் புறம்பாக சாலைகளைக் கடந்ததால் ஏற்பட்டவை என்று காவல்துறை கூறியது.
"சாலைகளைக் கடக்க மேம்பாலங்கள், போக்குவரத்து
விளக்குகள் போன்ற சாலை விதிகளுக்கு உட்பட்ட முறைகளைக் கடைப்பிடிக்குமாறு முதியோரைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுபானம்
அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இக்குற்றத்தைப் புரிந்ததற்காக கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 741 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே குற்றத்துக்காக இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 793 பேர் பிடிபட்டனர்.
இருப்பினும், மதுபானம்
அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடு குறைந்தது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 78 விபத்துகள் பதிவாகின.
அந்த எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 71ஆகக் குறைந்தது.
இது ஒருபுறம் இருக்க, வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 66,480 பேர் இந்த விதிமீறலில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 69,291ஆக அதிகரித்தது.
வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையும் 474லிருந்து 487ஆக அதிகரித்தது.
போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறியும் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் செல்லும் விதிமீறல் இவ்வாண்டின் முற்பகுதியில் குறைந்துள்ளது.