பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக கணவன், மனைவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர். 40 வயது திருவாட்டி நாச்சம்மை செல்வ நாச்சியப்பன், அவரது கணவரான 43 வயது திரு அருணாசலம் முத்தையா மீது இனி அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட கால
கட்டத்தில் மியன்மாரைச் சேர்ந்த ஹிலா ஹிலா மியாங் என்ற பணிப்பெண்ணை சிங்கப்பூரர்களான திருவாட்டி நாச்சம்மையும் அவரது கணவரும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் எதிராக 2020ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்த்து திருவாட்டி நாச்சம்மை வழக்கு விசாரணை கோரினார். பணிப்பெண்ணின் முகத்தில் அடித்ததாகவும் சூடான கரண்டியை அவர் மீது வீசியதாகவும் திருவாட்டி நாச்சம்மை மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பணிப்பெண்ணை உதைத்ததாகவும் குத்தியதாகவும் திரு அருணாசலம் மீது மூன்று குற்றச்
சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாகப் புதிய ஆதாரம் கிடைத்ததை அடுத்து, இருவரையும் விடுவிக்க முடிவெடுக்கப்பட்டதாக தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் அந்த ஆதாரம் குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருவாட்டி நாச்சம்மையும் திரு அருணாசலமும் பேச
மறுத்துவிட்டனர்.
தம்பதியர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளானதாகவும் இந்த விவகாரத்தைக் கெட்ட கனவாகக் கருதி அதை மறந்து வாழ்க்கையைத் தொடர இருவரும் விரும்புவதாகவும் அவர்
களைப் பிரதிநிதித்த வழக்கறிஞரான திரு காளிதாஸ் முருகையன் இம்மாதம் 2ஆம் தேதியன்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பு தமது கட்சிக்காரர்களுக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்திருப்பதாக அவர் கூறினார்.
வழக்கு காரணமாக ஆசிரியரான திருவாட்டி நாச்சம்மையின் பணிகள் தடைபடவில்லை என்றார் அவர். அவர் அதே பள்ளியில் கற்பித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவிப்பதாக திரு காளிதாஸ் முருகையன் தெரிவித்தார்.

