சட்ட நடைமுறைப்படி, தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் விதிக்கப்படும் மரணதண்டனைக்கு எதிராக, ஒருமித்த அனைத்துலகக் கருத்து இல்லை என்று சட்ட அமைச்சும் உள்துறை அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
"ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் குற்றவியல் நீதிக் கட்டமைப்பை நிர்ணயிக்கும் இறையாண்மை உரிமை உள்ளது. அது அந்நாட்டின் சூழலுக்கும் அனைத்துலகச் சட்ட கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாகவும் இருக்கும். அந்த உரிமை மதிக்கப்படவேண்டும்," என்று அந்தக் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மரணதண்டனைக்கு எதிராக சிங்கப்பூர் இடைக்கால தடை பிறப்பிக்கவேண்டும் என்று இரு அனைத்துலக லாபநோக்கமற்ற அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைச்சுகளின் கூட்டறிக்கை பதிலளித்தது.
அந்த இரு அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை பல தவறான கருத்துகளையும் தவறுகளையும் கொண்டுள்ளது என்றும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கும் முன்பாக உண்மைகளை அலசி ஆராயவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட் கடந்த மாதம் 9ஆம் தேதியன்று தற்போது நிலுவையில் உள்ள மரண தண்டனைகளை நிறுத்திவைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது.
ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மனித உரிமைக்கான அனைத்துலகச் சட்டக் கழகமும் இதே போன்று மரண தண்டனைக்கு எதிராக இடைக்கால தடையைக் கோரியது.
போதைப்பொருள் கடத்தும் குற்றம் மரண தண்டனை விதிப்பதற்கான அனைத்துலகச் சட்டத்துக்கு உட்படவில்லை என்று மேற்கண்ட இரு லாபநோக்கமற்ற அமைப்புகளும் வலியுறுத்தி
இிருந்தன.
ஆனால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானது அல்ல என்றும் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சிங்கப்பூரில் தங்களை நிலைநாட்ட முடியாமல் இருப்பதற்கு மரண தண்டனை உதவி உள்ளது என்றும் அமைச்சுகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.