சிங்கப்பூரில் உள்ள நான்கு ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஓராண்டு காலத்தில் 1,000க்கும் மேற்பட்ட மனக்குறை புகார்களைப் பெற்று இருக்கின்றன.
அந்த மனக்குறைகளில் மாணவர்களின் நடத்தையை நிர்வகிப்பது முதல் பெற்றோர்கள் திட்டுவது, வேலை மதிப்பீடுகள், மனநலப் பிரச்சினைகள், வாழ்க்கைத் தொழில் முன்னேற்றம் வரை பலவும் உள்ளடங்கும்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் சமது அப்துல் வகாப் நேற்று நாடாளுமன்றத்தில் இது பற்றி தெரிவித்தார்.
ஆசிரியர்கள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது.
இருந்தாலும் மூன்று அம்சங்களில் மேலும் பலவற்றை அரசாங்கம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கட்டொ ழுங்கை நிர்வகிக்க மேலும் ஆதரவு தேவைப்படுகிறது; வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இன்னும் சிறந்த முறையில் சமநிலையைச் சந்திக்க ஆசிரியர்களுக்கு மேலும் உதவலாம்;
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கம், சிங்கப்பூர் மலாய் ஆசிரியர்கள் சங்கம், சிங்கப்பூர் சீன ஆசிரியர்கள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களின் புகார்கள் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்களப் பணியாற்றியதற்காக இந்த ஆண்டு பிற்பகுதியில் தாதியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவிருக்கிறது.
அதேபோலவே கொவிட்-19 காலத்தில் ஆற்றிய சேவை களுக்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை தருவது பற்றி பரிசீலிக்கும்படி அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
இதே கருத்தை ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே எதி ரொலித்தார்.
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளை இவர் வரவேற்றார். இருந்தாலும் இது பிரச்சினையில் ஒரு பகுதிதான் என்றார் அவர்.
இவர் மூன்று யோசனைகளை முன்வைத்தார். கல்வித் துறையாளர்களுக்குக் கல்விச் சேவைக்கு அப்பாலும் தொழில்துறை அனுபவ பயிற்சி கிடைக்க வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கிறது;
ஒவ்வொரு பள்ளியும் தனது சொந்த மதிப்பீட்டைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக தேர்வு வினாத் தாட்களைக் குழுமமாக உருவாக்கலாம்;
வேலை நிலவர மேம்பாடுகளை இதர எல்லா கல்வியாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், பலதுறை தொழிற்கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறினார்.
மனநலம் தொடர்பில் ஆசிரியர்களுக்கு உதவ கல்வி அமைச்சு செயல்பட்டு வருகிறது என்று கூறிய திரு கான், ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைக்கும் என்று உறுதி தெரிவித்தார்.
அவர்களுடைய பணிச்சுமை சமாளிக்கக்கூடிய நிலையில் தொடர்ந்து இருந்துவரும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டடார்.

