ஒரு புதிய சட்டத்தின்படி, டிஎன்ஏ எனப்படும் மரபணுத் தகவல் வளம் விரிவுபடுத்தப்படுகிறது.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மறுபடியும் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களை விரைவாக அடையாளம் காண இதன் மூலம் வழி ஏற்படும் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா தொடர்பான விவாதத்தின்போது அவர் பேசினார்.
குற்றம் நடக்கக்கூடிய இடங்களில் திரட்டப்படும் தடயங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாக பெரிய அளவிலான டிஎன்ஏ தகவல் வளம் அதிகாரிக்குக் கிடைக்க அந்த மசோதா வகை செய்கிறது.
தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், விதிமீறல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த கடுமையான நடைமுறைகள் அமலில் இருக்கும் என்றார்.

