ஈராண்டுகளுக்குப் பிறகு சாங்கி விமான நிலைய நான்காம் முனையம் மீண்டும் திறப்பு
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை சரிந்ததால் மூடப்பட்ட சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையம், ஈராண்டு இடைவேளைக்குப் பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று ஏறக்குறைய 1,000 பயணிகளையும் ஐந்து விமானச் சேவைகளையும் முனையம் கையாண்டது. வரும் வாரங்களில் விமானப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முனையத்தில் செயல்பாடுகளைத் தொடங்கிய 16 விமான நிறுவனங்களில் கேத்தே பசிபிக்கும் கொரியன் ஏரும் அடங்கும்.
ஹாங்காங்கில் இருந்து கேத்தே பசிபிக் விமானம் CX739ல் பயணம் மேற்கொண்டோர் நேற்று பிற்பகல் 2.38 மணிக்கு நான்காம் முனையத்திற்கு வந்திறங்கினர். அவர்களுக்கு ஆர்க்கிட் மலர்கள், நினைவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முனையத்தில் செயல்பாடுகள் சுமூகமாக அமைந்தன. முனையத்திலிருந்து புறப்பட்ட, இங்கு வந்திறங்கிய பயணிகள் குடிநுழைவுச் சோதனை சுமூகமாக இருந்ததாகக் கூறினர்.
சில கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தாலும், 30க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளும் உணவகங்களும் இயங்கின. வரும் மாதங்களில் கூடுதலான கடைகள் கட்டங்கட்டமாக திறக்கப்படுவதை எதிர்பார்க்கலாம்.
நான்காம் முனையத்தில் செயல்பாடுகள் சுமூகமாக அமைவதை உறுதிசெய்ய விமான நிலையங்களுடனும் விமான நிலையப் பங்காளித்துவ அமைப்புகளுடனும் சேர்ந்து சாங்கி விமான நிலையக் குழுமம் கடந்த மே மாதம் முதல் செயல்பாட்டுத் தயார்நிலை சோதனைகளை நடத்தி வந்துள்ளது. இதில் 3,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பயணப் பைகளைக் கையாளும் முறை, தானியங்கி பயணிப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புப் பரிசோதனை நடைமுறை போன்றவை சரியாக இயங்குகின்றனவா என்பது பற்றி பரிசோதிக்கப்பட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமத்தில் விமான நிலைய செயல்பாட்டு நிர்வாகத்திற்கான மூத்த துணைத் தலைவர் ஆங் சியூ மின் கூறினார்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த சூழலில் செயல்பாடுகளைச் சமாளிக்க பாவனைப் பயிற்சிகளும் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
முனையம் நான்கு, ஆண்டுக்கு 16 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலைக் கொண்டு உள்ளது.

