கொவிட்-19 பெருந்தொற்றுக்கு அப்பாற்பட்டு, மனிதகுலம் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினையாக பருவநிலை மாற்றம் உள்ளது. இதற்கு எதிரான பதில் நடவடிக்கைக்கு பிளவுபட்ட உலகம் தடையாக அமையக்கூடும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகம், செலவு, ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பிளவுபட்ட உலகம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
'நோபெல் பரிசு பெற்றோர் கலந்துரையாடல் 2022: நாம் விரும்பும் எதிர்காலம்' எனும் நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியபோது இதனைச் சொன்னார்.
உக்ரேனில் நிலவிவரும் போர் போன்ற நிகழ்வுகள் உயிருடற்சேதம் மட்டுமின்றி அறிவியல் துறையில் சேர்ந்து இயங்குவதற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆசிய மருத்துவ மாணவர் சங்கத்துடனான பங்காளித்துவ முயற்சியில் நோபெல் பரிசு அவுட்ரிச் அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஏற்பாடு செய்த இந்தக் கலந்துரையாடல் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
நோபெல் பரிசு கலந்துரையாடலைப் பயன்படுத்தி ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள மாணவர்களிடம் டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.
நோபெல் பரிசு பெற்றவர்கள் தங்களுடன் அறிவியல் சார்ந்த புரிதலைக் கொண்டு வரும் அதே வேளையில், பரந்த உலகில் முக்கியமான பண்புநலன்களையும் கொண்டுள்ளனர் என்றார் அவர்.
நோபெல் பரிசு பெற்ற எட்டுப் பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அவர்களில் இந்திய ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியும் அடங்குவார்.
குழந்தை தொழிலாளர் குறித்து அவரது முயற்சிகளுக்காக 2014ல் நோபெல் அமைதிப் பரிசை அவர் வென்றார்.

