இவ்வாண்டு பெரும்பாலான வர்த்தகங்கள் லாபம் ஈட்டலாம் என்பதை எதிர்பார்க்கின்றன. எனினும், செலவினங்கள் அதிகரித்து வருவது குறித்து அவை கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழிற்சபை நடத்திய வர்த்தக ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்த ஆய்வில் பங்கெடுத்த 1,000க்கும் அதிகமான நிறுவனங்களில் 90 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள்.
ஆய்வு முடிவுகளை நேற்று பகிர்ந்த தொழிற்சபைத் தலைவர் கோ சூன் கெங், கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து பொதுவாக வர்த்தகங்கள் மீண்டு வருகின்றன என்று கூறினார். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 38 விழுக்காட்டினர் தங்கள் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஒப்புநோக்க, கடந்த ஆண்டு இந்த விகிதம் 26 விழுக்காடாக இருந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 72 விழுக்காடு நிறுவனங்கள், இவ்வாண்டு தாங்கள் லாபம் ஈட்டலாம் என்பதை எதிர்பார்க்கின்றன.
எனினும், 75 விழுக்காடு நிறுவனங்கள் செலவினம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டன. கடந்த ஆண்டு இந்த விகிதம் 57 விழுக்காடாக இருந்தது.
மனிதவள தேவைகளைக் குறைக்க, 54 விழுக்காடு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகங்களை உருமாற்ற, தானியக்கமயமாக்க, அல்லது மின்னிலக்கமயமாக்க இருப்பதாகக் கூறின.

