பொன்மணி உதயகுமார்
இணையத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு உதவ புதிய நிலையம் ஒன்று திறக்கப்படவிருக்கிறது. உதவி கோரும் தொலைபேசிச் சேவை, ஆலோசனை, சட்டச் சேவை ஆகியவற்றைப் புதிய நிலையம் வழங்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிலையம் சேவை வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம், சிங்கப்பூர் மாதர் அமைப்புகள் மன்ற வளாகத்தில் 'ஷீகேர்ஸ்@எஸ்சீடபுள்யூஓ' எனும் நிலையம் திறக்கப்படும். 'எஸ்ஜி ஹெர் எம்பவர்மெண்ட்' (ஷீ) எனும் லாபநோக்கமற்ற அமைப்பு இந்த நிலையத்திற்கு வித்திட்டது.
புதிய நிலையத்திற்கு இதுவரை ஒரு மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், இந்த நிலையத்தில் இரு முழுநேர மனநல ஆலோசகர்களும் ஏறக்குறைய 100 தொண்டூழிய வழக்கறிஞர்களும் சேவை வழங்குவர்.
சமூக ஊடகங்கள் ஒவ்வொவொன்றும் இணையத்தள துன்புறுத்தல்களைக் கையாள தனிப்பட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளன.
இவற்றை பெண்கள் ஒரே இடத்தில் அதாவது 'ஷீ'யின் இணையத்தளத்தில் காணும் வசதியை ஏற்படுத்தித் தர, ஒன்றிணைந்த வழிகாட்டியைத் தயார்செய்ய எண்ணுகிறது 'ஷீ'. உதவி நாடி வருபவர் களுக்கு ஆலோசகர்கள் தகுந்த முறையில் ஆலோசனை அளிக்க இது உதவும்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படங்கள், காணொளிகள், தகவல்கள் போன்றவற்றை இணையத்தளத்தில் வெளியிடுவது, இணையம் மூலம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, தேவையற்ற உரையாடல்கள் போன்றவை, 'ஷீ' எதிர்கொள்ள உதவும் பிரச்சினைகளில் அடங்கும்.
இம்மாதிரியான தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து புகார் அளிக்கும் முறைகளை எளிமைப்படுத்த எண்ணுகிறது 'ஷீ'.
ஷியின் நிறுவனர் வழக்கறிஞர் ஸ்டெஃபனி யுவென் தியோ. அவருடன் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ள சிம்ரன் டூர் 'ஷீ'யின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட உள்ளார்.
வெளியுறவு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சரான சிம் ஆன், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ என் லிங் இருவரும் 'ஷீ' அமைப்பின் சிறப்பு ஆலோசகர்களாக செயல்பட உள்ளனர்.
வருங்காலத்தில் சிண்டாவுடன் இணைந்து செயல்படத் திட்டம் இடுகிறது 'ஷீ'.