சுவா சூ காங் அவென்யூ 7ல் சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 7.45 மணியளவில் 12 வயதுச் சிறுவனை கார் மோதியது.
சம்பவத்தையடுத்து சிகிச்சைக்காக அச்சிறுவன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.
அப்போது சிறுவன் சுய நினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தனது மகன் நபில் எல்ரிஸ்கி புட்ராவிற்கு முழங்கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மற்றபடி அவனது உடல் நிலை சீராக இருப்பதாகவும் சிறுவனின் தாயார் திருவாட்டி நோரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நபிலுக்குத் தலையிலும் அடிபட்டிருந்ததால் தானும் குடும்பத்தினரும் மிகவும் கவலைப்பட்டதாகக் கூறிய அவர், உள்காயம் ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
சிறுவன் நபில் சாலையைக் கடந்து தனது தாத்தா வீட்டிற்குச் சென்று பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டதாகத் திருவாட்டி நோரா கூறினார். வழக்கமாக அவனுடன் செல்லும் தாயார் அன்று உடன் செல்லவில்லை.
நபில் இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்.
நாளை மறுநாள் கேட்டல் கருத்தறிதல் தேர்வும் இம்மாதம் 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வுகளும் இடம்பெறும். அதற்குள் சிறுவனின் உடல்நிலை தேறாவிட்டால் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை அவன் எழுத முடியாது.
அதற்குப் பதிலாக சிறுவனது முன்னோட்டத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அவனுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று திருவாட்டி நோரா கூறினார். விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

