சுகாதார அறிவியல் ஆணையம் மொடர்னா நிறுவனம் உற்பத்தி செய்யும் இரு திறன் தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதி வழங்கி யுள்ளது. அந்த இருதிறன் தடுப்பூசி முதன்முதலில் தோன்றிய சார்ஸ் சிஓவி-2, ஓமிக்ரான் பிஏ.1 ஆகிய இரண்டு கிருமி வகைகளுக்கு எதிராகத் தடுப்பாற்றல் கொடுக்கும்.
ஸ்பைக்வேக்ஸ் என்பது அந்தத் தடுப்பூசியின் பெயர். முதல் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட 18 வயதினரும் அதற்கு மேற்பட்ட வயதினரும் அதை பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசியாகப் போட்டுக்கொள்ளலாம்.
புதிய தடுப்பூசி சிங்கப்பூரில் எப்போது கிடைக்கும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
மொடர்னா நிறுவனம், "அதன் முதல் இருதிறன் தடுப்பூசியை சிங்கப்பூரில் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் பெறுவதற்கு ஆணையத் துடனும் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக," தனது அறிக்கையில் கூறியது.
ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசிக்கான அதிகாரத்துவ பரிந்துரையை சுகாதார அமைச்சும் கொவிட்-10 தடுப்பூசி தொடர்பிலான நிபுணர் குழுவும் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று ஆணையம் நேற்று கூறியது.
தனது மருந்து ஆலோசனைக் குழு, தொற்றுநோய் நிபுணர் குழு ஆகியவற்றுடன் ஆலோசித்தபின்னர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதாக சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.
மொடர்னாவின் முந்திய தடுப்பூசி முதன்முதலில் தோன்றிய கொரோனா சிஓவி-2 வகைக் கிருமிக்கு எதிராக தடுப்பாற்றல் தந்தது. இந்தப் புதுவகைத் தடுப்பூசி, அக்கிருமி வகைக்கு எதிராக தொடர்ந்து தடுப்பாற்றல் அளிக்கும் என்று ஆணையம் கூறியது.
அத்துடன் ஓமிக்ரான் பிஏ.1 வகைக்கு எதிராகவும் செயல்படும்.
மேலும் ஓமிக்ரான், பிஏ.4, பிஏ.5, ஆல்ஃபா, பேட்டா, டெல்டா, காமா ஆகிய கொவிட்-19 கிருமி வகை களுக்கு எதிரான பிறபொருள் எதிரிகளை ஊக்குவிக்கும் என்று முன்னோட்ட தரவுகள் காட்டுவதாக ஆணையம் தெரிவித்தது.

