தங்கள் நிதி இருப்பையும் ஓய்வுக்காலத்தையும் திட்டமிடத் தேவையான அறிவுத்திறனையும் உறுதியான நடவடிக்கைகளையும் சிங்கப்பூரர்களுக்கு வழங்க புதிய 'மணிசென்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இயக்கம் வரும் நவம்பர் மாத இறுதி வரை நடைபெறும்.
மணிசென்ஸ் மன்றம் அந்த இயக்கத்தை முன்னெடுக்கும். சிங்கப்பூர் நாணய ஆணையமும் மனிதவள அமைச்சும் அதற்கு இணைந்து தலைமை வகிக்கும். மேலும் 12 அரசாங்க அமைப்புகள் அந்த இயக்கத்தில் கலந்துகொள்ளும்.
சிங்கப்பூரர்கள் பலரும் நிதித் அறிவுத்திறனை எளிதாகப் பெற உதவும் நோக்கில் 'மணிசென்ஸ்' எனும் தேசியக் கல்வித்திட்டம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வாண்டு இயக்கத்தில் நேரடியாகவும் ஊடகங்களிலும் நிகழ்ச்சி கள் இடம்பெறும். நிதித் திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காக கருவிகளும் சேவைகளும் முன்வைக்கப்படும். வசந்தம் தமிழ் ஒளிவழி, சூரியா மலாய் ஒளி வழி ஆகியவற்றில் குறுநிகழ்ச்சிகளும் சேனல் 8, சிஎன்ஏ ஆகியவற்றில் விளையாட்டு நிகழ்ச்சி, விளக்கப்படம் போன்றவையும் ஒளிபரப்பப்படும். நிதி இருப்பைக் கையாளவும் நிதி தொடர்பான விவேகமான முடிவுகளை எடுக்கவும் உதவும் குறிப்புகள் இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.
அத்துடன் கல்வி நிலையங்கள், தொழில்துறை ஆகியவற்றுடன் சேர்ந்து மணிசென்ஸ், இளை யர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும். ஓய்வுக்காலத்துக்குத் திட்டமிடும் பயிலரங்குகள், பொதுமக்களுக்கு நிதி நலன் குறித்த தனிப்பட்ட ஆலோசனை போன்றவை வழங்கப்படும்.
ஓய்வுகாலத்துக்குத் திட்டமிட்டு உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் முழுமையாகவும் படிப்படியாகவும் வழிகாட்டும் பயிலரங்குகளை நிதி அறிவுத்திறன் நிலையம் பல இடங்களில் நடத்தும்.
மேலும், 'மணிசென்ஸ்' அமைப்பின் மேம்படுத்தப்பட்ட நிதிநலனைக் கணக்கிடும் கருவி, அதன் மின்னிலக்க நிதித் திட்டமிடல் கருவி ஆகியவற்றையும் பொது மக்கள் பயன்படுத்தலாம்.

