தீமிதித் திருவிழாவுக்கும் அதற்கு முந்தைய நேர்த்திக்கடன்களான பால்குடம், மாவிளக்கு, அங்கபிரதட்சணம், கும்பிடுதண்டம், ஆகியவற்றுக்கும் இணையப் பதிவு நாளை 16ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
அடுத்த மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீமிதித் திருவிழா நடைபெறவிருக்கிறது.
எந்த நேர்த்திக்கடனுக்கும் நேரடிப் பதிவு கிடையாது. அனைத்து பங்கேற்புப் பதிவுகளும் இணையம் வழிதான் செய்யப்பட வேண்டும்.
பதிவை உறுதிசெய்யும் செய்தி அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
கிருமிப் பரவல் சூழலில் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் தொடர்பிலான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, இவ்வாண்டு தீமிதி திருவிழா நடைபெறும்.
பக்தர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு எதுவுமில்லை என்றாலும் பதிவு செய்து பங்குபெறுவோர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பங்குபெற முடியும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேர்த்திக்கடன்களில் பங்கேற்கும் பக்தர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறது.
மேலும், 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட தீமிதிக்கும் பக்தர்கள், அக்டோபர் 10ஆம் தேதிக்கு முன், தங்கள் அடை யாளத்தை உறுதிசெய்ய, பெற்றோருடன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்தச் சேவை செயல்படும்.
அக்டோபர் 16ஆம் தேதி அன்று மாலை 5.00 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.00 மணி ஆகிய நேர அட்டவணைக்குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்தர்கள், தங்கள் கங்கணத்தைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிஜிபி திருமண மண்டபத்தின் தரைத் தளத்துக்குச் செல்ல வேண்டும்.
இரவு 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி ஆகிய நேர அட்டவணைக்குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்தர்கள், தங்கள் கங்கணத்தைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள பகோடா ஸ்திரீட்டுக்குச் செல்ல வேண்டும்.
மாலை 5.00 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.00 மணி ஆகிய நேர அட்டவணைக்குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்தர்கள், தங்கள் பாத ஊர்வலத்தை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தொடங்குவர்.
இரவு 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி ஆகிய நேர அட்ட வணைக்குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்தர்கள் தங்கள் கங்கணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வெளியே காத்திருந்து பின்னர் தீமிதிக்க கோயிலுக்குள் செல்லலாம்.
கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு ஒரே இடத்தில் அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நேர அட்டவணைக்குப் பதிவு செய்துகொண்ட பக்தர்கள் மற்றொரு நேர அட்ட வணைக்கு மாற்றிக்கொள்ள அனு மதிக்கப்பட மாட்டார்கள். முதலில் வருவோருக்கு முதற்சலுகை எனும் அடிப்படையில் பதிவு நடைபெறும்.
அதேபோல் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கங்கணத்தைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொண்டோர், அதை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பக்தர்கள் அனைவரும் அவர்களின் நேர்த்திக்கடன்கள் தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகவே ஆலயத்தில் இருக்க வேண்டும்.
தாங்கள் பதிவுசெய்து கொண்டுள்ள நேர அட்டவணை யைத் தாண்டி மற்றொரு நேர அட்டவணையில் தங்கள் நேர்த்திக்கடன் களைச் செலுத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பக்தர்கள் தீமிதித் திருவிழாவில் கலந்துகொள்ள https://heb.org.sg/fw2022 இணையத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அக்டோபர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகளின் நேரலையைக் காண, இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப், ஃபேஸ்புக் தளத்தை நாடலாம்.
தீமிதித் திருவிழா தொடர்பான மேல் விவரங்களுக்கு 6223 4064 எனும் எண்ணில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலைத் தொடர்புகொள்ளலாம்.

