நிதிச் சேவையில் உள்ளூர் ஊழியர்களை மேம்படுத்த $400 மில்லியன் நிதியுதவி வழங்கப்படும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
நிதிச் சேவைத் துறை உருமாற்றுத் திட்டம் 2025ன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரு வோங், உலகளாவிய நிதி மையமாக சிங்கப்பூரின் நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதற்கு ஏதுவாக எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கும் ஊழியரணியை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
"ஆசியாவில் முன்னிலை வகிக்கும் அனைத்துலக நிதி மையாக இருக்க, மிகச் சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை," என்று சிங்கப்பூர் நாணய ஆணையக் கட்டடத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியின்போது திரு வோங் தெரிவித்தார்.
திரு வோங், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட உருமாற்றுத் திட்டம், இதற்கு முன்பு அறிமுகப்
படுத்தப்பட்ட திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். புதிய திட்டத்துக்கு ஆதரவாக ஐந்து தூண்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிதி ஆற்றல் வலிமையை மேம்
படுத்துவது, நிதி உள்கட்டமைப்பை மின்னிலக்கப்படுத்துவது, ஆசியாவில் கரிம வெளிப்பாடு அறவே இல்லாத நிலையை விரைவுப்படுத்துதல், நிதிக் கட்டமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைத்தல், திறன்மிக்க மற்றும் ஏற்புடைய ஊழியரணியை உருவாக்குவது ஆகியவை அந்த ஐந்து தூண்களாகும்.
திறன் உத்திமுறை இரு முனை அணுகுமுறையைக் கொண்டது என்று திரு வோங் தெரிவித்தார்.
"உள்ளூர் நிதி ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வட்டார, உலகளாவிய நிதி மையத்தை உருவாக்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.
"எனவே, வெளிநாடுகளிலிருந்து மிகச் சிறந்த திறனாளர்களை சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்க்க வேண்டும்," என்று துணைப் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

