நல்லாசிரியர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவ்வாண்டு மூத்த தமிழாசிரியர்களான திரு சாமிகண்ணு சிதம்பரம், திரு பொன்னழகு மாணிக்கம் இருவரும் பெறுகின்றனர். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இன்று(செப்டம்பர் 17) நடைபெறும் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் இருவரும் விருதளித்துச் சிறப்பிக்கப்படுவர்.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது விழாவை 2002ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன.
சிங்கப்பூரில் முன்மாதிரியாகத் திகழும் தமிழாசிரியர்களைக் கௌரவிக்கும் வண்ணம் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுபவர்களில் ஒருவரான 74 வயதுடைய திரு சாமிக்கண்ணு சிதம்பரம் ஒரு மூத்த தமிழாசிரியர்.
தலைவராகவும் உறுப்பினராகவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தில் 55 ஆண்டுகள் சேவையாற்றி வருபவர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆசிரியர் துறையில் பணிபுரிந்து வரும் இவர் ஏறத்தாழ 26 ஆண்டு கள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.
இவர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது, மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழியின் பேச்சு புழக்கம் குறைந்து வருவதை உணர்ந்து தமிழாசிரியர் சங்கம் 1990களில் 'தமிழில் பேசுவோம்' இயக்கத்தைத் தொடங்கியது.
தற்போது பெரியளவில் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழாவிற்கு இந்த இயக்கம் முன்னோட்டமாக இருந்தது.
தமிழர் அடையாளத்தை இளையர்களிடம் முன்னிறுத்த தமிழாசிரியர்களின் பங்கு முக்கியமானது என்கிறார், தமிழ் சமூகத்தை முன்னேற்றுவதில் தீவிர நாட்டம் உள்ளதிரு சாமிக்கண்ணு.
தமிழாசிரியர் சங்கத்தின் தலை வராக இருந்த 20 ஆண்டு காலத்தில் தமிழ் கல்வி, ஆசிரியர் பணி சார்ந்த பல்வேறு முயற்சிகள் திரு சாமிக்கண்ணு மேற்கொண்டார்.
சிங்கப்பூரில் தமிழ்மொழியில் பட்டக்கல்வி அமைப்பதற்கு இவரது தலைமைத்துவத்தின்கீழ் சங்கம் விடாது செயல்பட்டது.
ஐந்து ஆண்டுகால முயற்சியின் பலனாய் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு தமிழ்மொழியில் பட்டக்கல்வி தொடங்கப்பட்டது.
ஆசிரியர்களின் அரும்பணிகளை அங்கீகரிக்கும் வண்ணம் வழங்கப்பட்டுவரும் நல்லாசிரியர் விருதுக்கு தமிழ் முரசுடன் சேர்ந்து திரு சாமிக்கண்ணுவின் தலைமைத்துவத்தின்கீழ் தமிழாசிரியர் சங்கம் அடித்தளமிட்டது.
மேலும், இவரது தலைமைத்துவத்தின்கீழ் தமிழாசிரியர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கல்வி அமைச்சில் தமிழாசிரியர்கள் இயக்குநர் பொறுப்பை ஏற்க சங்கம் வழியமைத்தது.
உலகத் தமிழாசிரியர் பேரவையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராகச் செயல்பட்டு வரும் திரு சாமிக்கண்ணு, உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.
நம்பிக்கை ஊட்டும் ஆசிரியர்
கற்றல் கற்பித்தலில் மதிப்பீடு என்பது முக்கியமான கூறாகும்.
வகுப்பில் ஆசிரியர் கற்பிப்பதில் கவனம் செலுத்தினால் தேர்வு களும் மதிப்பீடுகளும் சுலபமே என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் உருவாக்கவேண்டும் என்பதே வாழ்நாள் சாதனையாளர் விருது பெரும் மற்றொரு மூத்த தமிழாசிரியரான 73 வயது திரு பொன்னழகு மாணிக்கத்தின் இலக்கு.
தமிழாசிரியர் பணியில் 54 ஆண்டு காலமாக ஈடுபட்டுள்ள இவர், பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஏறத்தாழ 260 மாணவர்களுக்கு தனி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பதின்ம வயதிலேயே ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர், ஏறத்தாழ 24 ஆண்டுகள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழாசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
தம் பணிக் காலத்தில் மாணவர்களின் சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து வருங்கால தலை முறைக்கு உதவும் வகையில் வழிகாட்டிக் கையேடு என்னும் கையேட்டினை உருவாக்கும் முயற்சியில் குழுவுடன் ஈடுபட்டார்.
தம்முடைய வகுப்பிற்கு மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் வருவதை தமது வெற்றியாகக் கருதும் இவர், 12 ஆண்டுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் 42 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
"டிரஃபால்கர் தொடக்கப்பள்ளியில் நான் ஆசிரியராக பணிபுரிந்தபோது அந்த வட்டாரத்திலுள்ள பல மாணவர்கள் ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
"அவர்களுக்கு கல்வியின் அவசியத்தையும் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து அவர்கள் சிறந்த மாணவர்களாக உருவெடுக்க துணை நின்றது இன்றளவும் மனநிறைவையளிக்கிறது," என்றார் திரு பொன்னழகு.

