கேலாங்கில் நாற்காலி ஒன்றில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாலியல் தொழில் புரியும் மாது ஒருவரைப் பார்த்த ஓர் ஆடவர், அந்த மாதை மானபங்கப்படுத்தினார். பிறகு அவரை பக்கத்தில் இருக்கும் ஓரிடத்திற்கு தூக்கிச் சென்றார்.
அங்கு அவர் அந்த மாதுடன் பாலியல் உறவு கொண்டார். அந்த மாது அந்த இடத்தில் இருந்து எழுந்து தள்ளாடியபடியே நடந்து மறுபடியும் நாற்காலியிலேயே படுத்து தூங்கிவிட்டார்.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அந்த மாது காவல்துறையில் புகார் செய்தார். மூன்று நாள்கள் கழித்து அந்த ஆடவர் கைதானார்.
இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பங்ளாதேஷை சேர்ந்த தொழிற்சாலை ஊழியரான பாத்தியன் சோஹாக் என்ற அந்த 40 வயது ஆடவர் மீது முதலில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆனால், பாலியல் உறவுக்காக அந்த மாதைக் கடத்திச் சென்றதாகக் கூறும் குறைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவருக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று பிரம்படி கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணை மானபங்கப் படுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த மாது இருமல் மருந்தையும் தூக்க மருந்தையும் உட்கொண்டு மயங்கி தூங்கினார் என்பது பின்னர் தெரியவந்தது.

