வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தடையில்லா வாகனம் நிறுத்திவைப்பு முறையைப் பரிசோதித்து வருகிறது. பொங்கோலுக்கு வெளியே முதன்முதலாக ஓல்ட் ஏர்போர்ட் ரோடு உணவங்காடி அருகே உள்ள இரு கார் பேட்டைகளில் சோதனை இப்போது நடக்கிறது.
ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் உள்ள திறந்தவெளி கார் பேட்டையும் பல அடுக்கு கார் பேட்டையும் நுழைவு வழியிலும் வெளியேறு வழியிலும் நுழைவுத்தடுப்பு (gantry barriers) இல்லாமல் புதன்கிழமை முதல் செயல்பட்டு வருகின்றன.
அந்த வாயில்களில் உள்ள படச்சாதனங்கள் வாகனத்தின் எண் தகட்டைப் படித்து வாகனத்தை அனுமதிக்கும். வாகனங்களை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைப்பவர்கள் கடன் அல்லது பற்று அட்டை மூலம் Parking@HDB என்ற செயலியைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தும் வாய்ப்பை Parking@HDB என்ற விவேக முறை வழங்குகிறது.
சென்ற ஆண்டு முதல் எட்டு கார் பேட்டைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றில் ஆறு பேட்டைகள் பொங்கோலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

