தென்கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 200 பேர் நேற்று ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவை சுத்தப்படுத்தினர். சேகரிக்கப்படும் குப்பைக் கூளங்களின் மறுபயனீடு பற்றி அவர்கள் தெரிந்துகொண்டனர்.
அனைத்துலக கடற்கரை துப்புரவு தினம் 2022ஐ ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய 90 கிலோ குப்பைக் கூளங்களைச் சேகரித்தனர். துடுப்புப் படகுகளில் சென்று சுமார் 40 பேர் கடலில் இருந்த கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
தென்கிழக்கு மாவட்ட மேயர் ஃபாமி அலிமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செரில் சான், ஹெங் சுவீ கியட், ஜெசிகா டான், டான் சுவான்-ஜின், டான் கியட் ஹாவ், டின் பெய் லிங் ஆகியோரும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதனிடையே, சிங்கப்பூருக்கான ஐரோப்பிய ஒன்றிய குழுமம் ஏற்பாட்டில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நேற்றுக் காலை நடந்த துப்புரவு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்டார்கள்.