புதிய கடப்பிதழுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் சிங்கப்பூரர்கள் இப்போது ஒன்று முதல் இரண்டு வாரங்களில் அதை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆணையம் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 7,000க்கும் மேற்பட்ட கடப்பிதழ் விண்ணப்பங்களைப் பெற்றது.
காலாங் ரோட்டில் உள்ள இந்த ஆணைய கட்டடத்திற்கு வெளியே பலரும் வரிசைப்பிடித்து நின்றனர்.
இந்த ஆண்டு முடிவில் பயணம் செய்யலாம் என்று திட்டமிடும் சிங்கப்பூரர்கள் இப்போது கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்ற செவ்வாய்க்கிழமை ஆணையம் தெரிவித்தது.
பொதுவாக அக்டோபர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கடப்பிதழ் விண்ணப்பங்கள் உச்சத்தைத் தொடும். கொவிட்-19க்கு முன்பு இத்தகைய நிலைதான் நிலவியது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.
தாமதமாக விண்ணப்பிப்போருக்கு குறித்த நேரத்தில் கடப்பிதழ் கிடைக்காமல் போகலாம் என்று ஆணையம் எச்சரித்தது.
தனக்கு வரக்கூடிய விண்ணப்பங்களைப் பொறுத்தே பரிசீலனை காலம் இருக்கும் என்பதை ஆணையம் சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டி இருக்கிறது.
மே மாதம் விண்ணப்பங்கள் அதிகரித்ததால் அவற்றைப் பரிசீலிக்கவும் கடப்பிதழைப் பிறப்பிக்கவும் இந்த ஆணையத்தின் இதர துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 அதிகாரிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிங்போஸ்ட் நிறுவனத்துடன் சேர்ந்து கடப்பிதழ் பிறப்பிப்பு ஆற்றலை தான் அதிகப்படுத்தியது எப்படி என்பதையும் ஆணையம் விளக்கியது. இப்படி சேர்ந்து செயல்பட்டதால் சூழ்நிலை பெரிதும் மேம்பட்டதாக அது கூறியது.
இதனிடையே, கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம் நெருங்குவதைக் கருத்தில்கொண்டு கடப்பிதழ் தேவைப்படுவோர் இப்போதே மனு செய்ய வேண்டும் என்று பயணத் துறை வல்லுநர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் ஆணை பிறப்பித்து 'மிலியு இன்சைட்' என்ற சந்தை ஆய்வு நிறுவனம் இந்த மாதம் ஓர் ஆய்வை நடத்தியது.
அதில் 1,000 பேர் கலந்துகொண்டனர். ஆண்டின் கடைசி நான்கு மாதத்தில் தாங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லவிருப்பதாக கிட்டத்தட்ட 32% தெரிவித்தனர்.
பயணச் சீட்டுகளுக்கு அல்லது தங்குமிடத்திற்குத் தாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

