உலக அளவில் மின்னிலக்கமயம் ஏறுமுகமாகி பரபரவென பரவி வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காலத்தில் அதன் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டதால் மின்னிலக்கமயம் மேலும் வேகம் எடுத்தது. மின்னிலக்கமயத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் அதன் அவசியத்தை உணர்ந்து ஒருபடி முன்னிலையில் வேகமாக அந்த யுகத்திற்குத் தோதாக மாறிவருகிறது.
மக்களில் படிக்காதவர்கள், சிறு,குறு தொழில் நடத்துவோர், கடைக்காரர்கள், முதியவர்கள், தொழில்நுட்பம் பற்றி நன்கு அறியாதவர்கள், ஓய்வுபெற்றவர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கி மின்னிலக்கமயம் முழுமையானதாக இருக்கவேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்கு.
மின்னிலக்கமயம் எல்லாத் துறைகளிலும் வேகமாக விரிவடைந்து வருகிறது. என்றாலும் நிதித்துறையில் அதன் வேகம் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. முக்கியமாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மின்னிலக்கச் சேவைகளை வேகமாக அதிகரித்து வருகின்றன. சில வங்கிகள் முற்றிலும் மின்னிலக்க ரீதியில் செயல்படும் வங்கிகளைத் தொடங்கி இருக்கின்றன.
எந்த ஒரு சமூகத்திலும் வழிவழியான வழக்கமான வங்கிகளால் போதிய அளவுக்குச் சேவையைப் பெற இயலாத மக்கள், தொழில் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இதை மறுப்பதற்கில்லை.
புதிதாக வேலையில் சேர்வோர், பகுதிநேர ஊழியர்கள் போன்றவர்களையும் மிகச் சிறிய அளவில் செயல்படும் நிறுவனங்களையும் இவர்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சிங்கப்பூரில் தொழில் நடத்த மின்னிலக்க வங்கி களுக்கு உரிமம் கொடுக்கப்படும்போது, அத்தகைய வங்கிகள் இத்தகைய மக்களையும் நிறுவனங்களையும் உள்ளடக்கி மின்னிலக்கமயத்தை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றுதான்.
இருந்தாலும்கூட இத்தகைய மின்னிலக்க வங்கிகளும் மக்கள் தொகையில் சிலருக்குச் சேவை வழங்காமல் அவர்களை விட்டுவிடக்கூடிய இடர் இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் ஃபேர்பிரைஸ் குழுமமும் சேர்ந்து அண்மையில் டிரஸ்ட் பேங்க் என்ற மின்னிலக்க வங்கியைத் தொடங்கின.
ஓய்வுபெற்ற வங்கியாளரும் தொழில்நிறுவனருமான ஒருவர் டிரஸ்ட் பேங்க் கடன் அட்டையைப் பெற விண்ணப்பித்தார். ஆனால் அதைப் பெற அவருக்குத் தகுதி இல்லை என்று மின்னிலக்க ரீதியில் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வங்கி அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளவும் அவரால் முடியவில்லை.
டிரஸ்ட் பேங்க் முற்றிலும் மின்னிலக்க வங்கி. ஆகையால், அலுவலகம் சென்று நேரே அதிகாரியைப் பாரக்கலாம் என்றால் அதுவும் அவருக்கு இயலாத ஒன்றாகிவிட்டது. அவரின் இந்த அனுபவத்தைப் பற்றி அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தச் சம்பவம் அங்கொன்றும் இங்கொன்றும் யாரோ ஒருவருக்கு மட்டும் தொடக்கத்தில் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.
என்றாலும்கூட ஓய்வுபெற்றவர்கள் சில மின்னிலக்க வங்கிகளின் குறிப்பிட்ட சில சேவைகளைப் பெற முடியாத சங்கடம் உண்மையிலேயே இருக்கக் கூடும் என்பதையே இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. மின்னிலக்க வங்கிச் சேவை களைப் பெற தகுதி இருந்தும் சிலர் அதைப் பெற இயலாத சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சிங்கப்பூரில் 2030ஆவது ஆண்டு வாக்கில் மக்கள்தொகையில் ஏறக்குறைய கால்வாசிப்பேர் ஓய்வுபெற்றவர்களாக இருப்பார்கள் என்பதை இங்கு நினைத்துப் பார்க்கவேண்டி இருக்கிறது.
மின்னிலக்க வங்கிகள் யார் யாரை எல்லாம் எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கலாம். அந்த இலக்கு நிறைவேறியும் இருக்கலாம்.
இருந்தாலும்கூட அப்போதும் சேவையைப் பெற இயலாதவர்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
நிதித்துறையில் மேலும் பலரையும் உள்ளடக்கி மின்னிலக்க சேவைகளை அவர்களுக்கும் நீட்டிக்க மின்னிலக்க வங்கிகளுக்குப் பல வழிகள் இருக்கத்தான் செய்யும்.
அத்தகைய வங்கிகளுக்கு ஊழியர்கள் வேலை பார்க்கும் வழிவழியான வங்கிகளைப்போல் அலுவலகம் கிடையாது. ஆகையால் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய நேரடி தொலைபேசி வசதியை இவை அமைக்கலாம்.
அதன் மூலம் அதிகாரிகளுடன் வாடிக்கை யாளர்கள் தொடர்புகொள்ளும் வசதி இருக்க வேண்டும். மின்னிலக்க வங்கி சேவையைப் பெற ஒருவர் மனுச் செய்யும்போது, அவர் மாதச் சம்பளக்காரராக இருந்தால் அவரின் விண்ணப்பம் எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஓய்வுபெற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குச் சொத்துகள் இருக்கலாம்; அல்லது வேறு வருவாய் இருக்கலாம்; ஆகையால் இத்தகையோரின் விண்ணப்பத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடாமல் மேலும் பல விவரங்களைத்தாக்கல் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.
இதைப்போலவே மொத்த விற்பனை துறையில் செயல்படும் மின்னிலக்க வங்கிகள், சிறிய நிறுவனங்களின் மனுவை நிராகரித்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இவற்றிடம் அல்லது இவற்றின் உரிமை யாளர்களிடம் அடமானம் வைக்கத்தக்க சொத்துகள் இருக்கலாம்.
ஆகையால் அத்தகைய நிறுவனங்கள் மேலும் விவரங்களைத் தாக்கல் செய்து அதன் மூலம் தங்கள் மின்னிலக்க சேவைகளைப் பெற மின்னிலக்க வங்கிகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
மக்கள்தொகையில் பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். எந்த ஒரு வங்கியும் அது வழிவழியான வங்கியாக இருந்தாலும் மின்னிலக்க வங்கியாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவது என்பது இயலாத ஒன்றுதான்.
ஆனால் சேவைகளைப் பெற இயலாமல் விடு படக்கூடிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க பல வழிகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் மின்னிலக்க வங்கிகளுக்கு இத்தகைய வழிகள் அதிகம் என்றே தெரிகிறது.

