இந்த வட்டாரத்திலேயே முதன்முதலாக சிங்கப்பூரில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. திருவாட்டி லிம் ஜெக் மெங் என்ற 61 வயது மாதின் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட்டு அது அவரின் கல்லீரலுக்கும் பரவிவிட்டது. புற்றுநோய் நான்காவது கட்டத்தையும் அடைந்துவிட்டது. ரசாயன சிகிச்சை பெற்று வந்த அவர், தொடர்ந்து அந்தச் சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
அந்த மாதுக்கு கோ ஜுன் லி என்ற 22 வயது மகன் இருக்கிறார். அவர் இப்போது தேசிய சேவையாற்றி வருகிறார். அந்த ஒரே மகன் தன்னுடைய தாய்க்கு தனது கல்லீரலை தானமாகத் தர முன்வந்தார்.
அந்த மகனின் உடலில் இருந்து 60 முதல் 70 விழுக்காட்டு கல்லீரல் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் உறுப்பு மாற்று நிலையத்தில் திருவாட்டி லிம்மிற்கு வெற்றிகரமான முறையில் அது பொருத்தப்பட்டது.
அதற்கு முன்னதாக மருத்துவர்கள் அந்த மாதின் பெருங்குடலில் இருந்து ஒரு புற்றுநோய் கட்டியை அகற்றிவிட்டனர்.
கல்லீரல் மாற்றி பொருத்தப்பட்டதை அடுத்து திருவாட்டி லிம் குறைந்தபட்சம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு உயிரோடு இருப்பார் என்பதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகி உள்ளன.
2020ஆம் ஆண்டு அந்த மாதுக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது அவர் முதன்முதலாக புற்றுநோயில் இருந்து குணமடைந்து உள்ளார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து ஏழு நாள்களுக்குப் பிறகு அந்த மாது வீடு திரும்பினார்.
நடப்பது போன்ற சிறுசிறு பயிற்சிகளை இப்போது அவர் செய்து வருகிறார். அவருடைய மகன் முற்றிலும் குணமடைந்துவிட்டார்.

