பாசிர் ரிஸ் பூங்காவின் 2.9 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் வீவக வீடுகள்
பாசிர் ரிஸ் பூங்காவின் 2.9 ஹெக்டர் நிலப்பரப்பு பொது வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி பூங்காவின் கார் நிறுத்துமிடமாகத் தற்போது பயன்படுத்தப்படும் இடம்.
பூங்காவின் கார் நிறுத்துமிடம் Bயில் (படம்) 20 கார்களை நிறுத்துவதற்கான இடமும் 10 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு உரிய இடமும் தற்போது பொது வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலப்பரப்பு ஏறத்தாழ நான்கு காற்பந்துத் திடல்களுக்குச் சமமானது. பொது வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 2.9 ஹெக்டர் நிலப்பகுதியில் இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
எஞ்சிய நிலம் இப்போது வனப்பகுதியாக இருக்கிறது. ஆனால் அது பூங்காவிற்குள் இல்லை. கட்டுமானம், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியோடு சேர்ந்து இதிலும் வனப்பகுதி அமைந்து உள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தப் பகுதியில் வீடுகளைக் கட்டுவது குறித்து இயற்கை வளம் சார்ந்த குழுக்களைக் கலந்து ஆலோசித்ததாக, சிங்கப்பூர் இயற்கை நலச் சங்கத்தின் தலைவர் ஷான் லம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.
அதில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு கழகம் நிலப்பரப்பின் அளவைச் சரிசெய்துகொண்டதாக அவர் கூறினார். அதனால் குறைவான வனப்பகுதியே பாதிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 580 முதல் 640 வீடுகள் வரை கட்ட இயலும்.

