மலேசியாவின் கோத்தா திங்கி வட்டாரத்தில் உள்ள ஹுத்தான் பந்தாய் வனப்பகுதியில் நெடுந்தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டபோது காணாமற்போன 33 வயது சிங்கப்பூர் ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஜேசன் ரென் ஜீ என்று அடையாளம் காணப்பட்ட ஆடவர் குறித்து நேற்று முன் தினம் பிற்பகல் 3.26 மணிக்குத் தகவல் கிடைத்ததாக மலேசியக் காவல்துறை கூறியது. தேடல், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதையடுத்து நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அனுமதியின்றி அந்த வனப்பகுதியில் நுழைந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.
திரு ஜேசனுடன் இந்தப் பயணத்தில் அவரது மலேசிய நண்பர் டெங் ஜி பாவ் ஈடுபட்டு இருந்தார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்று, வழிகாட்டியுடன் செல்லும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

