சிங்கப்பூரில் பதின்ம வயதினர் புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளதாகவும் வயது ஏற, ஏற அந்த ஆர்வம் குன்றுவதாகவும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பதின்ம வயது இளையர்கள் வயது ஏறும்போது அறவே புத்தகம் படிப்பது இல்லை. வேறு பல வேலைகளைச் செய்வதிலேயே அவர்கள் நேரத்தைச் செலவிடுவதாக அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளது.
தேசியக் கல்விக் கழகம், சென்ற ஆண்டு 5,700 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறித்த ஆய்வை நடத்தியது.
இதில், உயர்நிலைப் பள்ளிகளின் மேல் வகுப்பு மாணவர்களில் வெகு சிலரே புத்தகங்களை வாசிப்பது தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று பதிவு செய்துள்ளனர்.
உயர்நிலைப் பள்ளி முதல் ஆண்டில் பயிலும் 59 விழுக்காட்டு மாணவர்கள் அன்றாடமோ இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ நூல் வாசிப்பில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். உயர்நிலைப் பள்ளி நான்காம் ஆண்டு மாணவர்களிடையே இந்த விகிதம் 39.8 விழுக்காடு மட்டுமே.
உயர்நிலைப் பள்ளி முதல் அல்லது இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் நீர்த்துப்போவதாக ஆய்வு கூறுகிறது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் பதின்ம வயதினர் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் வாசிக்கப் பிடித்தல், பொழுதுபோக்கு, மொழி வளத்தை அதிகரித்தல் ஆகியவை.
மின்னியல் சாதங்களின்பால் ஈர்க்கப்படுதலும் பள்ளி நடவடிக்கைகள் அதிகரித்தலும் வாசிப்பு ஆர்வம் குறைவதற்கான காரணங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

