தனிப்பட்டோர், எல்லா துறைகளையும் ஈடுபடுத்தும் தேசிய கலந்துரையாடல் தொடக்கம்
சிங்கப்பூரை பருவநிலையால் பாதிக்கப்படாத நாடாகப் பலப்படுத்த முயற்சிகளை எடுக்கும்படி மக்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறைகளையும் தனிப்பட்ட ஒவ்வொருவரையும் உள்ளடக்கும் தேசிய கலந்துரையாடல் இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.
அந்த இயக்கம், தனிப்பட்டவர்கள், கல்வி நிலையங்கள், அமைப்புகள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரிவித்தார்.
'சுற்றுச்சூழலுக்கான பங்காளிகள் கருத்தரங்கம் 2022' என்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் சுற்றுச்சூழல், நிதிவள மூலாதாரத் தூணை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் 'முன்னேறும் சிங்கப்பூர்' இயக்கம் பற்றி அறிவித்தார். அந்தப் புதிய சமூக கட்டமைப்பில் ஆறு தூண்கள் அடிப்படையானவை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்தத் தூண்களில் நேற்று தொடங்கப்பட்ட இயக்கமும் ஒன்று.
பருவநிலையால் பாதிக்கப்படாத சிங்கப்பூரை உருவாக்குவதில் முழு நாட்டையும் ஈடுபடுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்தை சிங்கப்பூர் இப்போது இரண்டு வழிகளில் சமாளிக்கிறது. கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க கடல் தடுப்பு சுவர்களைக் கட்டுவது அவற்றில் ஒன்று. கரிமப் புகையைக் குறைப்பது போன்ற முயற்சிகள் மற்றொன்று.
இந்த முயற்சிகளுக்கு கணிசமான நீண்டகால முதலீடுகள் தேவை. இந்த இலக்குகளை நிறைவேற்ற பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பல தரப்பினரை ஈடுபடுத்தும் புதிய முயற்சிகளில், பொருளியல் வளத்தை நிலையாக எப்படி பலப்படுத்துவது என்பதில் ஒருமித்த கவனம் செலுத்தும் விவாதிப்புகள் இடம்பெறும்.
பருவநிலை செயல் வாரம் 2022 என்ற ஒரு நிகழ்ச்சி செப்டம்பர் 19 முதல் 25 வரை நடக்கிறது. இந்நிலையில் நேற்றைய கருத்தரங்கும் நடந்தது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கு இந்த ஆண்டு 50 வயதாகும் நிலையில், அமைச்சர் திருவாட்டி ஃபூ சிங்கப்பூர் ஆறு தூய்மை இயக்கம், நியூவாட்டர் உருவாக்கம் போன்ற நம் முன்னோடிகளின் சாதனைகளை நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரின் பசுமை உருமாற்றம் அரசாங்கம், நிறுவனங்கள், சமூகம், மக்கள் அனைவரின் முயற்சிகளையும் உறுதியையும் சார்ந்தே இருக்கிறது என்றார் அமைச்சர்.
பொதுமக்கள் தங்களுடைய யோசனைகள், கருத்துகளை go.gov.sg/stewardenv என்ற முகவரியில் தெரியப்படுத்தலாம்.

