சிங்கப்பூரில் நேற்று அரசாங்கக் கட்டடங்கள் அனைத்திலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.
காலமான பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
"இன்று இரண்டாவது எலிசபெத் அரசியாருக்கு உலகம் பிரியாவிடை கொடுக்கிறது. லண்டனில் அதிகாரபூர்வ இறுதிச்சடங்கு நடக்கிறது.
"எலிசபெத் அரசியார் நம்பிக்கை, நிலைப்பாடு, தொடர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தார்," என்று ஃபேஸ்புக்கில் பிரதமர் நேற்று குறிப்பிட்டார்.
"அரசியார் தனது காலத்தில் உண்மையான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆழ்ந்த கடமை உணர்வு, அர்ப்பணிப்பு, பிரிட்டனுக்கும் காமன்வெல்த் நாடுகளுக்கும் உலகிற்கும் ஆற்றிய தொண்டுகள் ஆகியவற்றுக்காக எப்போதுமே அவர் நினைவுகூரப்படுவார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பிரிட்டனின் அரசர் மூன்றாம் சார்ல்ஸுக்கும் அரச குடும்பத்தினருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டுருஸுக்கும் பிரிட்டன் மக்களுக்கும் நான் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். அரசியாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்," என்று திரு லீ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லண்டனில் நேற்று மாலை 6 மணியளவில் நடந்த அரசியாரின் இறுதி பிரியாவிடைச் சடங்கில் பிரிட்டன் மக்களும் உலகத் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இரண்டாம் எலிசபெத் அரசியார் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இம்மாதம் 8ஆம் தேதி தமது 96வது வயதில் மரணமடைந்தார்.
வாழ்வின் அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த புதன்கிழமை முதல் பல மணி நேரமாக வரிசையில் காத்திருந்து அரசியாருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதனிடையே, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அரசியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என்று வெளியுறவு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதிபருடன் அவரின் கணவரான முகம்மது அப்துல்லா அல்ஹாப்ஷியும் இஸ்தானா, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் அந்தச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்தும் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் லண்டன் சென்று அரசியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டனின் புதிய மன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர்.

